
"நம்மின் பெரும்பாலான கனவுகள் முதலில் சாத்தியமற்றவை போலத் தோன்றும். பிறகு அவை முடியாததாகத் தோன்றும். நம்முடைய மனவுறுதியினால் விரைவில் அவை தவிர்க்க இயலாததாக ஆகிவிடும். -Christopher Reeve.
சாதிக்க நினைக்கும் மனிதர்களுக்கு அவர்களின் கனவுகள் என்பது விதைகள். அந்த விதைகள் பட்டுப் போவதும் சாதனை மரமாக நிலைத்து நிற்பதும் அவர்களின் மன உறுதியில்தான் இருக்கிறது. ஏனெனில் விதைக்கு தேவையான நீரும் உரமும் போட்டாலும் எதிர்வரும் இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளைத் தாங்கி வேர்பிடித்து மரமாக மாறுவது சிறப்பு.
அதேபோல்தான் தனிநபரின் கனவும். சிறுவயதில் மனதில் விதைத்த இலக்கு எனும் விதைக்கு எண்ணங்கள் மற்றும் செயல்கள் எனும் நீரூற்றி தடைகள் தாண்டி அதை அடைவது மனவுறுதி எனும் வேர் மூலம்தான்.
இந்த மனஉறுதியின் சான்றாக இந்த மனிதர் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார். ஆம். துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ்-மீ டிராபி கார் பந்தயத்தில் 992 போர்ஷே பிரிவில் சீறிப்பாய்ந்து 3-வது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கும் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் அஜித்குமார்தான் அவர்.
தன்னம்பிக்கை மனிதராக நடிப்புத்துறையில் சாதித்து புகழின் உச்சியில் இருந்தாலும் அவருக்கு கார் ரேஸ் என்றால் கொள்ளைப் பிரியம். பயிற்சிகள் மூலம் தனது ஆர்வத்தை வளர்த்தார். போட்டிகளில் கலந்துகொண்டார்.
53 வயதான நிலையில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியை 3 ஆவது இடம் பெறச்செய்து தனது நாட்டின் கொடியை ஏந்திய கார் ரேஸ் வீரரான நடிகர் அஜீத்குமாரின் வெற்றி சுலபமாக கிடைத்தது அல்ல. 2002-ல்தான் முதன் முதலாக கார் ரேஸிற்குள் நுழைகிறார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று முதல்முறையாக வெற்றி மேடையில் ஏறியிருக்கிறார்.
இன்று அவரின் வெற்றியைக் கொண்டாடும் பலரும் ஏன் அவரின் உறவுகள், ரசிகர்கள் உட்பட பலரும் அஜீத்தின் ரேஸ் முயற்சியை 'பெரிய நடிகர் நல்லா சம்பாதிக்கிறார் பேரும் புகழ் ஏகப்பட்டது இருக்கு... இன்னும் என்ன? ரேஸ்லாம் தேவையற்ற வேலை..' என்று பேசியுள்ளனர்.
ஆனால் அஜீத்தின் நோக்கம் மாறவில்லை. கார் ரேஸராக தனது இலக்கின் பயணத்தை துவங்கி இன்று டீம் ஓனராக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்களிப்பின் பின் அவரது 23 வருட முயற்சி இருப்பதை கவனிக்கவேண்டும். எத்தனை நீண்ட காலங்கள்.
நடுவில் விபத்துகளில் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் பாதிப்புகளை சந்தித்து தீவிரப் பயிற்சிகள் மூலம் அதிலிருந்து மீண்டு மீண்டும் கார் ரேஸில் கலந்துகொண்டு வெற்றிக் கோப்பையை பெற்று நாட்டின் பெருமையை உயர்த்தியது பெரும் சிறப்பு. ஆனால் இந்த சிறப்புக்கு முழுக் காரணம் அஜித்தின் மன உறுதி மட்டுமே எனலாம்.
எத்தனை இடர்கள் விமர்சனங்கள் சந்தித்தபோதும் தனது இலக்கின் பயணத்தை தன்னம்பிக்கையுடன் தொடர்ந்த அஜீத்தின் மன உறுதியை நாமும் பெற்றால் தவிர்க்க முடியாத வெற்றி நம்மாலும் பெறமுடியும்.