

இந்தியர்கள் நாம் தான் எப்பொழுதும் வாழ்க்கையிலே
அறுபதைக் கடந்தாலே அத்தனையும் முடிந்ததென்று
முடிவுக்கு வருகின்றோம்! மூலையிலே முடங்குகின்றோம்!
பணிஓய்வு பெற்றிடவே பலமாதம் இருக்கையிலும்
போகிறேன் நானென்று புலம்புவார் பலருண்டு!
இந்த நிலை கொஞ்சமாய் இப்பொழுது மாறினாலும்
முழுதாய் மாற்றத்தை முதியோர் பெறவில்லை!
ஓய்வுக்குப் பின்னாலே உண்டு நல்வாழ்க்கை
என்பதைப் பலபேரும் எண்ணியே பார்ப்பதில்லை!
மனமிருந்தால் மார்க்கமுண்டு மகிழ்வான வாழ்வுமுண்டு
என்பதே உலகத்தின் இயற்கைதரும் நியதி!
அறிந்தோர் அதனை அப்படியே பின்பற்றி
இறுதிவரை பூவுலகில் இன்பமாய் வாழ்கின்றார்!
ஏனையோர் இங்கு எதிலும் ஒட்டலின்றி
காலத்தைக் கழிக்கின்றார்! கவலையில் உழல்கின்றார்!
ஆனாலும் பூமிப்பந்தில் அடித்தே விளையாடுவோர்
அனைவருமே அகவை எழுபதைக் கடந்தோரே!
ரஷ்யாவின் அதிபதியாய் உக்ரைனைக் குடைந்தெடுக்கும்
புடினுக்கு இப்பொழுது வயது எழுபத்திரண்டாம்!
வளர்ந்த அமெரிக்காவுக்கு வகையான ‘டப்’கொடுக்கும்
சீன அதிபர் ஜிங்பிங் அகவையும் அதேதானாம்!
மலேசியா சென்று மகிழ்வுடனே நம் தமிழுக்குப்
பெருமை சேர்த்து வந்த பிரதமர் மோடிக்கோ
முக்கால் நூறு தான்! முழுதாய் எழுபத்தைந்துதான்!
பாலஸ்தீனத்தைப் பாடாய்ப் படுத்தி வைக்கும்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கும் எழுபத்தைந்தாம்!
ஒவ்வொரு நாளுமே உலகை அதிரவைக்கும்
ட்ரம்பின் வயததுவோ எழுபத்து ஒன்பதாம்!
அமெரிக்க அதிபரையும் அதிரவைக்கும் அறிக்கைகளை
கொடுத்து வரும் காமேனிக்கு அகவை எண்பத்தைந்தாம்!
என்னவெல்லாம் தெரிகிறது இதிலிருந்து என்றறிந்தால்
வயதான போதினிலும் வயோதிகம் அடைந்திட்டாலும்
அடித்து விளையாடும் ஆர்வம் மட்டும் இருந்திட்டால்
சாதித்துக் காட்டிடலாம்! சங்கடங்கள் போக்கிடலாம்!
ஓங்கி அடித்திடலாம்! உறவுகளைக் காத்திடலாம்!
ஏங்கி நிற்போர்க்கு இயன்றதைச் செய்திடலாம்!
நூறைத் தாண்டியும் நோய் நீங்கி வாழ்ந்திடலாம்!
சாவதற்கு முன்னாலே சரித்திரத்தில் நிலைத்திடலாம்!
வேண்டுவது ஒன்றேதான்! மாறும் மனோபாவம்!
அதிலுறுதி வந்திட்டால் அனைத்துமே சாத்தியந்தான்!