இன்றைய சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக நாம் பல காணொளிகளைக் காண்கிறோம். அதிலும் மோட்டிவேஷன் காணொளிகளை அதிகமாகப் பார்த்துவருகிறோம்.
நம்மில் பலர் இந்த மோட்டிவேஷன் காணொளிகளைப் பார்த்து, ஒரு உத்வேகத்தை அடைந்து, நாளை முதல் ஒரு செயலைச் செய்வதாக நம் மனதில் உறுதி எடுத்துக் கொள்கிறோம். இந்த உறுதிமொழியானது இரவு உறங்கும் நேரத்தில் நம்மைத் தூங்கவிடாமல் செய்யும். ஆனால், காலை எழுந்தவுடன் அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இப்படியே பல காணொளிகள்... பல உறுதிமொழிகள்... பல இரவுகள்... பல பகல்கள்...
இதிலிருந்து நமக்கு ஒரு சந்தேகம் எழும். வாழ்வில் முன்னேறுவதற்கு மோட்டிவேஷன் வேண்டுமா? அல்லது ஒழுக்கம் வேண்டுமா?
மோட்டிவேஷன்
மோட்டிவேஷன் என்பது நாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் நம் மனதில் ஏற்படும் ஒரு உத்வேக உணர்வு மட்டுமே. நம் மனதில் ஒரு குறிப்பிட்ட கால அளவு அதாவது, ஒரு ஐந்து நிமிடமோ, ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ, ஒரு மாதமோ இந்த உணர்வும் உறுதியும் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இந்தச் செயல்களை எல்லாம் நம்மால் தொடர முடியாது. மீண்டும் அதைத் தொடர வேண்டுமெனில் இதுபோன்று மோட்டிவேஷன் அல்லது உந்துதல் மீண்டும் மீண்டும் தேவைப்படும்.
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது ஒரு செயலை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து செய்யும் ஒரு மனக்கட்டுப்பாடு உடைய செயலாகும். இதற்கு பெரிய மோட்டிவேஷன் தேவையில்லை. ‘இந்தச் செயலைச் செய்வதனால் பிற்காலத்தில் நான் ஒரு நல்ல நிலையில் இருப்பேன்’ என்ற ஒரு உறுதிப்பாடு மட்டும் போதும். அந்தச் செயலை நம்மால் தொடர்ந்து செய்யமுடியும். இந்த ஒழுக்கமானது அகம், புறம் என இரண்டு வகையாக உள்ளது.
அக ஒழுக்கம்
எனக்கு எந்த ஒரு தீய பழக்கமும் இல்லை என்று எண்ணும் நபர்கள், தங்கள் அகத்துக்குள் பல தீய எண்ணங் களையும், எதிர்மறையான எண்ணங்களையும் வைத்திருந்தால், அவர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்களும் ஒழுக்கமற்றவர்களே! அக ஒழுக்கம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் எண்ணுவது ஆகும்.
புற ஒழுக்கம்
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல், சமூகத்திற்கு எந்த ஒரு பிரச்னையும் கொடுக்காமல் நன்முறையில் வாழ்வது புற ஒழுக்கம் ஆகும்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே, மோட்டிவேஷன் என்பது ஒரு செயலை தொடங்குவதற்கான வழி. ஆனால், ஒழுக்கம் என்பது அந்தச் செயலை தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான ஒரு வளர்ச்சிப் பாதை. அந்த வளர்ச்சிப் பாதையில் சரியாகப் பயணிக்க வேண்டும் எனில் அக, புற ஒழுக்கத்தைச் சீராக கடைப்பிடிக்க வேண்டும்.
மோட்டிவேஷன் மட்டும் இருந்து, ஒழுக்கம் இல்லையென்றால், அப்படிப்பட்ட மோட்டிவேஷனுக்குத் தான் என்ன பயன்? மோட்டிவேஷன் ஆரம்பப்புள்ளி என்றால், ஒழுக்கமே உயர்வதற்கான வழி!