
குணநலம் என்பதைப் பண்பு நலம் என்றும் கூறலாம். ஒருவன் பெரிய அறிவாளியாகவும், வசதிமிக்கவனாகவும் இருக்கலாம். ஆனால் அவனிடம் குணநலம் இல்லையென்றால் எதற்கும் பயனற்றவனாவான்.
மனிதன் ஒரு மரத்தைப் போல் வளரக்கூடாது. மனிதனைக் கணித்திடுவதற்கான கருவியாக அமைவது. அவனது குண நலமே தூய்மையான எண்ணம், இனிய பேச்சு, நல்ல செயல் ஆகியவை ஒருவனுடைய குணநலத்தை மற்றவர்க்குக் காட்டும் சாதனங்களாகும்.
மனிதனை விலங்கின் தன்மையிலிருந்து பிரித்துக்காட்டுவது. அவனது குணநலனே உடலை வைத்து ஒருவனை மனிதன் என்று தீர்ப்பிட முடியாது. அவனது பண்பு நலன்களை வைத்தே மனிதன் என்று அவனைக் கூறலாம். மனிதனை மனிதனிடமிருந்தே இனம்காட்டுவதும் குணநலன்களே.
"தனி மனிதனின் ஒழுக்கத்தை இயல்பான பண்பைக் கொண்டே தீர்ப்பிட வேண்டும்'' என்று அறிஞர் எமர்சன் கூறுகின்றார். எனவே. ஒருவனுடைய சொல்லும், செயலும், சிந்தனையும், தூய்மை, நேர்மை என்னும் அடிப்படைகளில் அமைதல் வேண்டும்.
பல வகையான மலர்கள் குவியலாக உள்ளபோது, அவற்றை இன்னின்ன மலர் என்று கூறுகின்றோம். காரணம், அம்மலர்களின் நிறம், வடிவம், இதழ்கள், மணம் ஆகியவை அவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
அவ்வாறே மனிதர்களையும், குணநலக் கூறுகளாகிய அறிவு. உணர்வு, மனத்தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றைக் கொண்டு இன்னார் இன்னாரென்று கூறுகின்றோம்.
தீய மனமுள்ளவரைக் கெட்டவர் என்றும், நல்ல மனமுள்ளவரை நல்லவர் என்றும், ஆலோசனை கூறுபவரை அறிவாளி என்றும்.சிந்தனையற்றவனை அறிவிலி என்றும், விலங்கு உணர்வுடையவனைத் துன்மார்க்கன் என்றும் கூறுகின்றோம்.
மனிதனுடைய குணநலத்தை வளர்க்க முயற்சி மிகவும் இன்றியமையாதது. முயற்சி இல்லாமல் குணநலத்தை வளர்க்க முடியாது இடைவிடாது எழும் உணர்வுகள் மீது கவனமும், தன்னடக்கமும் தேவை. தன்னுடைய வாழ்க்கைப் பாதையில், முன்னேற்றப் பாதையில் பல சோதனைகளும்,எத்தனையோ இடையூறுகளும் உண்டாகலாம். குணநலத்தில் சிறந்தவன் அவற்றையெல்லாம் கண்டு மனத்தளர்ச்சி கொண்டு நிற்கமாட்டான். தன்னுடைய முயற்சியில் மேலும் ஊக்கமும், வேகமும் காட்டுவான். மனவலிமையும், உள்ளத்தில் நேர்மையும் உடையவன், அவ்விடையூறுகளையெல்லாம் கண்ட அளவில் மனம் சோர்ந்து, வாழ்வின் வெற்றியைப் பற்றி வீணாகக் கவலைப்படமாட்டான்.
குணநலம் என்பது, ஒருவனுடைய சக்திகளிலெல்லாம் ஒப்பற்ற சக்தியாகும். மனிதனது இயல்பைச் சிறந்த முறையில் படம் பிடித்துக் காட்டுவது, அவனுடைய குணநலமே.
ஒருவனுடைய குணநலம், அவனுடைய நேர்மைப் பண்பின் மூலம் வெளிப்படும். நேர்மைப் பண்புடையவன், தன்னுடைய பேச்சின் மூலமும் செயலின் மூலமும் நேர்மையில் நின்றொழுகுவான். தன்னுடைய மனச்சாட்சியின்படித் தன் தொழிலைச் செய்து வெற்றி காண்பான். மற்றவர்களால் மதிப்புடனும் மரியாதையுடனும் போற்றப்படுவான்.
நல்ல மனசாட்சி ஒருவனுக்கு நல்ல மனவலிமையையும். திடமான உணர்வையும் கொடுக்கும். அதனையுடையவன் அறிவாற்றல் மிக்கவனாக, ஆண்மை மிக்க மனிதனாக மாறுவான். அவனது வாழ்வில் முன்னேற்றம் தேடிவந்தடையும்.
"எந்த மனிதனும் பணக்காரனாகவோ, தலை சிறந்த மனிதனாகவோ ஞானமிக்கவனாகவோ இருக்க நல்ல மனம் வேண்டும்" என்று அறிஞர் பெஞ்சமின் ருடியார்டு என்பவர் கூறுகிறார்.
எனவே, வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் காணவேண்டும் என்று விரும்புவோர், தமது குணநலத்தைப் பேணி வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் குணமென்னும் குன்றேறி நின்று. புகழில் பொலிந்து வாழ்வதுவே சிறப்பு.