
சாதனை செய்வதற்கும். நன்றி மறவாமல் இருப்பதற்கும் என்னங்க தொடர்பு இருக்கிறது. நிச்சயம் இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது.
செய்த நன்றி மறவாமல் இருப்பவர் மட்டுமே. என்றும் பணிவுடன் இருக்க முடியும். எப்பொழுதும் பிறர் தமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்க்கவேண்டும் அப்படி நினைத்துப் பார்ப்பவர் மட்டுமே மனிதராக இருக்க முடியும்
நம் சாதனையில் வளர வளர பணிவும் வேண்டும். நன்றி மறவாத உள்ளமே, என்றும் பணிவையும் கொடுக்கும்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
ஒருவர் காலம் அறிந்து செய்த உதவி சிறியதாய் இருந்தாலும் அது தேவைக்குச் செய்த உதவி அல்லவா! எனவே எப்பொழுதும் ஒரு உதவி செய்ததைப் பெரிதாக நினைத்து நன்றி அறிதலுடன் இருக்க வேண்டும்.
அன்று ஏதோ ஒரு சமயத்தில் உதவி செய்தார். அதற்காக அவரைக் காலம் முழுவதும் தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்க முடியுமா என்ன? என்று கேட்டால் அப்படிக் கேட்பவர் முட்டாளைப் போன்றவர்தான். ஏனென்றால் பிராணிகளுக்குக் கூட நன்றி உணர்வு அதிகம் உள்ளது.
இன்று இவர், வாய்ப்பு வசதியில் பெரிய ஆளாக வந்துவிட்டோம் என்ற கர்வத்தில் பேசக்கூடாது. பழையதை என்றும் மறக்கவும் கூடாது. மீண்டும் ஒரு நாள், அவரிடம் உதவி என்று கையேந்தும் சூழ்நிலையும் வரலாம். யாரால் சொல்லமுடியும். காலத்தின் கோலத்தில் எதுவும் நடக்கலாம்.எனவே. நன்றி மறக்காமல் வாழ்தலே மனிதப் பண்பு ஆகும்.
மேலும் உங்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யவும் முன் வருவார்கள். நன்றி உணர்வுடன்தான் அவர்களை உங்கள் வசம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் உதவி பெறுவார்கள். ஆனால் மரியாதைக்கு நன்றி கூடக் கூறமாட்டார்கள். இதற்கெல்லாம் நன்றி கூற முடியுமா என்று கர்வப்படுவார்கள்.
இப்படி மனம் உள்ளவர்க்கு மீண்டும் உதவி செய்ய யோசிப்பார்கள். அன்று வலிய உதவி செய்தோம். மரியாதைக்கு நன்றி கூடக் கூறாமல் போயிட்டான். இவனுக்குப் போய் உதவி செய்தோமே என்று நினைப்பார். கண்டும் காணாததுபோல் ஒதுங்கியும் செல்வார்கள்.
அன்பு உள்ளவர்களிடம் நன்றி உணர்வும் மிகுந்து இருக்கும். அன்பின்றி. மனம் போனபடி வாழ்பவரிடம் நன்றி எனும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது.
நன்றி எனும் உணர்வு உங்களுக்குள் குடி கொண்டிருந்தால், உங்களின் வளர்ச்சி மேன்மேலும் அதிகரிக்கும். காலம் முழுவதும் பெற்ற தாய், தந்தைக்கும். கல்வி கற்றுத்தந்த ஆசானுக்கும். காக்கும் கடவுளுக்கும் நன்றி கூறிக்கொண்டே இருங்கள்.
நன்றி உணர்வால் உங்கள் மனமும் தெளிவாகி புத்துணர்ச்சி பெறும், நன்றியை நினைத்துப் பார்ப்பதால் நாம் எப்பொழுதும் தாழ்ந்து விடப்போவதில்லை.
சிலர் ஏழ்மை நிலையில் இருந்து படிப்படியாக முன்னுக்கு வந்திருப்பார்கள். ஆரம்ப காலங்களில் அவருக்கு உதவிய உள்ளங்களை என்றும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
உதவியவர்களை என்றும் மறந்து விடக்கூடாது. சிலர் அதை மறந்து விடுவார்கள். பேசும்பொழுது பரம்பரை பரம்பரையாய் வசதியாய் வந்தவர்போல் பேசுவார்கள். இந்தக் கபட நாடகம் எதற்காக! என்றாவது ஒரு நாள் யார் மூலமாவது பழைய வாழ்க்கை தெரிந்துவிட்டால் என்ன செய்யப் போகிறார்.
எனவே எப்பொழுதும் நடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது. நிழல் தந்து உதவிய நெஞ்சத்தையும் மறக்காமல் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.