
ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதை மறக்காமல் வைத்திருந்து தக்க சமயத்தில் அவருக்கு உதவுவது மனிதப் பண்பு. இது எல்லோரிடமும் நிறைந்திருக்கும் பண்பு. கட்டாயம் இதை பின்பற்ற வேண்டிய கொள்கை என்று கூட கூறலாம். மனிதருக்கு இது சரி. ஏனெனில் ஆறறிவு படைத்தவர்கள் நாம். ஆனால் விலங்குகள்? அவைகளுக்கும் உதவும் பண்பு உண்டா? அப்படி உதவி இருக்கிறதா ?என்று அடுக் கடுக்கான கேள்விகள் நம்முள் எழும் .உதவி வருவதையும் பார்த்து வருகிறோம்.
அன்றாடம் நம் வீட்டில் வளர்த்து வரும் நாய், ஆடு, மாடு, கோழி என்று வித்தியாசமாக குரல் கொடுத்தால், அதன் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தால் நாம் அங்கு சென்று கவனித்துப் பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும்பொழுது ஏதாவது வித்தியாசமான பூச்சோ மற்ற ஜீவராசிகளான, பாம்பு, ஊர்வன போன்றவைகள் வருவதை கவனிக்கலாம். இதற்குதான் குரல் கொடுத்திருக்கிறது என்பதை அப்பொழுது புரிந்துகொள்வோம்.
முன்னொரு காலத்தில் வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் உடைய ஒரு அரசர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பறவையை செல்ல பறவையாக வளர்த்து வந்தார். காட்டில் வேட்டையாட செல்லும் பொழுது அவருக்கு அது பெரிதும் உதவி செய்யும்.
ஒரு நாள் காலையில் அரசர் செல்லப் பறவையோடு சில காவலாளிகள் துணையுடன் வேட்டைக்குக் கிளம்பினார்.
காட்டில் அவர் புள்ளிகள் உடைய ஒரு மானைப் பிடிக்க முயன்றார். ஆனால் அது வேகமாக ஓடிக்காட்டிற்குள் வெகு தொலைவு சென்று விட்டது. வெகு தொலைவிற்கு அதை துரத்தி வந்ததால் அரசரை தொடர்ந்து வந்த காவலாளிகள் அனைவரும் பின்தங்கி விட்டனர். செல்லப் பறவையும் அரசருடைய குதிரை மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தன. முடிவில் அரசர் தேடுதலை நிறுத்திக் கொண்டார்.
அவருக்கு இப்பொழுது கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் தம் குதிரையை தொடர்ந்து செலுத்தினார். ஒரு சிறிய குளத்தை அடைந்தார். அவர் ஒரு கோப்பையை எடுத்து அதை நீரால் நிரப்பினார். அதை அவர் தம் உதட்டருகில் கொண்டு செல்லும் பொழுது அந்தச் செல்லப்பறவை பறந்து வந்து தன் சிறகால் கோப்பையைத் தட்டிவிட்டது. அரசர் மறுபடியும் கோப்பையை நீரால் நிரப்ப அந்த செல்லப்பறவை அவ்விதமே மீண்டும் செய்தது.
அரசருக்கு இதனால் மிகுந்த கோபம் வந்தது. கத்தியை எடுத்து அந்த செல்லப் பறவையை கொல்ல முயன்றார். அப்பொழுது அந்தப் பறவை தன் தலையை உயர்த்தி அம்மரத்தைப் பார்த்தது. அந்த மரத்தில் கொடிய நஞ்சு உள்ள பாம்புகள் அநேகம் இருந்தன. அவற்றினுடைய நஞ்சு சொட்டு சொட்டாக குளத்தில் விழுவதை அரசர் பார்த்தார். பின்னர் செல்லப் பறவையை நன்றியுடன் பார்த்தார். தம்முடைய உயிரை அப்பறவை காத்ததை எண்ணி வியந்தார்.
நன்றியும் விசுவாசமும் பறவைக்கும் உண்டு என்பதை புரிந்து கொண்டு முன்பைவிட மேலும் அவற்றிடம் பாசம் காட்டி வளர்த்தார்.
படித்துப் பார்த்தால்தான் புத்தகத்தின்
கருத்து புரியும்
பழகி பார்த்தால்தான்
பல்லுயிர்களின்
அருமை புரியும்...!