

ரிச்சர்டு ஜெர்மன் என்பவர். ஒரு வாழ்வியல் அறிஞர். தொழில் -தொழிலாளர் குறித்து இவர் பல ஆய்வுகள் நடத்தினார்.
தொழில், தொழிலாளர் ஆலோசனை' என்ற ஓர் நிறுவனத்தையே ரிச்சர்டு நடத்தி வந்தார். இருபத்தி ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு தொழில்கள், தொழில் நிறுவனங்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல்வகை தொழிற் பிரச்னைகள் எல்லாவற்றிலும் நேரடியாக ஈடுபட்டவர் இவர்.
இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இவர் கண்டுபிடித்த உண்மைகளில் ஒன்று.
'உன் தொழிலை நேசிப்பதிலேதான் தொழில் வெற்றி அடங்கியிருக்கிறது. தங்கள் தொழிலை வேலையை ரசிக்காதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்றுப் போகிறார்கள்.' என்று கூறும் ரிச்சர்டு ஜெர்மன் ஓர் புள்ளி விவரத்தையும் தருகிறார். தங்கள் தொழிலில் முழுமனத் திருப்தியுள்ளவர்கள் ஐந்தில் ஒரு தொழிலாளியே என்று கூறுகிறார்.
உழைப்பை ரசிக்கவேண்டும். உழைப்பை மதிக்க வேண்டும். உழைப்பில் திருப்தி அடையவேண்டும். ஆனால் பலருக்கு உழைப்பு திருப்தி அளிப்பதில்லை.
பொழுதுபோக்கே வாழ்க்கை என்று நினைக்கிறவர்கள் எவரும் உழைப்பை விரும்புவதில்லை. உழைப்பை பலர் விரும்பாததற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது. உழைப்பு சிலருக்கு சிறையாகத் தோன்றுகிறது . இப்படி நினைக்கின்றவர்கள் திருமணம், குடும்பம் ஒரே இடத்தில் வீட்டில் வாழ்வது எதையுமே சிறையாகத்தான் நினைப்பார்கள்.
அவர்களுக்கு உழைப்பு சூழ்நிலை முதலில் உள்ளத்தை பாதிக்கும். பின்பு உடல் நலனை சீர்குலைக்கும். இதற்கு இடம் கொடுக்காமல் திருப்தி இல்லாத உழைப்பாக இருந்தாலும் ஓரளவு மனதிருப்தியுடன் வாழ ஹெச். நெப்போலியன் கூறிய 'நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். துடிப்புடன் உழைக்கிறேன் என்று தினமும் காலையில் எழுந்தவுடன் பல முறை உரக்கக் கூறுங்கள்' என்ற பொன் மொழியை பின்பற்ற வேண்டும்.
இவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் மெல்ல மெல்ல உழைப்பில் பிடிப்பு உண்டாவதை நன்றாக உணரமுடியும். உழைப்பின் வெறுப்பை மாற்ற பழக்க மாற்றங்கள் பெரிதும் துணை செய்யும்.
உழைக்கும் களத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சியுடன் அணுகினால் நீங்கள் வெறுக்கின்றவர்களும் உங்களை நேசிக்கத் தொடங்குவார்கள்.
திருப்தி ஏற்பட, உழைப்பை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் சூழ்நிலையை ரசிக்கத் தொடங்குங்கள் நீங்களே உங்கள் தொழில் களத்தை நேசிக்க ரசிக்க முன்வருவீர்கள்.
தொழிற்களத்தில் திருப்தி ஏற்பட்டுவிட்டால் உழைப்பிலும் விருப்பமேற்படும்.
மகிழ்ச்சி எப்பொழுதும் நமக்கு முன்புதான் இருக்கின்றது. நாம் இதை விட்டுவிட்டு, வேறு எதையோ மகிழ்ச்சி என நினைத்துக் கொள்கிறோம். உண்மையான மகிழ்ச்சிக்குப் புறமுதுகு காட்டுகிறோம் என்கிறார் மார்க்ட்வைன்.
மகிழ்ச்சி, திருப்தி, நிறைவு உங்களுக்கு முன்பு மட்டுமல்ல. உங்களுக்குள்ளே மறைந்து கிடைக்கிறது. மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைச் சந்தியுங்கள். எவ்வகை உழைப்பும் விருப்பம் தரும்.