'உங்கள் கௌரவம், உங்கள் நாக்கின் நுனியில் தான் இருக்கிறது' என்றார் மில்டன்.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதீர்கள். உண்மையை பேசுங்கள். உண்மையாக நடந்து கொள்ளுங்கள். உண்மையாக நடப்பது உங்களுக்கு பல கஷ்டங்களை தந்தாலும், உண்மையை பேசாவிட்டால், இதை விட பல மடங்கு அதிகமான கஷ்டங்களை நீங்கள் அனுபவிக்க நேரிடும்.
உலகத்தில் இதுவரை தோன்றிய மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களுக்கெல்லாம் ஆஞ்சநேயர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார். என்ன சொல்ல வேண்டும்? எங்கே? எவ்வளவு? எப்படி? எதுவரை? என்பதற்கெல்லாம் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் ஆஞ்சநேயர். அசோகவனத்தில் இருந்து மீண்டதும் சீதையை என்று தொடங்கி இருந்தால் என்னமோ ஏதோ என்று கருதி ராமபிரான் மயங்கியே விழுந்திருப்பார். ஆனால் 'கண்டேன்' என்று தொடங்கினார், இதிலிருந்து அவரின் ஆற்றல் நிறைவு ,கல்வி அமைதி ,அறிவு பெருக்கம் இவ்வளவும் நிரம்பப் பெற்றவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாறும் வேட்ப மொழிவதாம் சொல்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
பயனில் சொல் பாராட்டுவானை பதர்எனல் மக்கட் பதடி எனல் என்கிறது திருக்குறள்.
ஆக, நாம் எப்படி பேச வேண்டும் என்பதற்கு விளக்கம் தரும் ஒரு குட்டிக் கதையை கீழே பார்ப்போம்!
முன்னொரு காலத்தில், சீன அறிஞர் ஒருவரிடம் பயின்று வந்த சீடனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது .
அறிஞரிடம் சென்று 'ஐயா, அதிகமாகப் பேசுவதால் ஏதேனும் பயன் உண்டா? என்று கேட்டான்..
அதற்கு அவர், தவளைகள்தான் இரவு பகல் பாராது எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும். அவை அப்படிக் கத்தி பேசுவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.!
ஆனால் சேவல் சில வேலைகளில் மட்டுமே, முக்கியமாக விடியலின் போது தங்களின் கூவலால் அனைவரையும் எழுப்பி நன்மை செய்கின்றது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? அதிகமாகப் பேசி கூச்சலிடுவதில் ஒரு பயனும் இல்லை. எதை எப்போது பேச வேண்டும் என்று உணர்ந்து பேச வேண்டும் என்றார்.
சீடனின் சந்தேகத்துக்கு நல்ல விடை கிடைத்தது. அப்போ நமக்கு?
மயில் போல் பிறந்தால் ஆடுவதில் அழகு
மான் போல் பிறந்தால் ஓடுவதில் அழகு
குயில் போல் பிறந்தால் கூவுவதில் அழகு
காக்கை போல் பிறந்தால் ஒற்றுமையில் அழகு
கழுகு போல் பிறந்தால் தேடுவதில் அழகு
பேச்சினில் பயன் இருந்தால் பேசுவதில் அழகு என்பதை உணர்வோம்; அதன் வழி நடப்போம்!