
மனித மனங்கள் எப்போதும் பலம் மற்றும் பலவீனங்களால் நிரம்பியே கிடக்கின்றன.
நூற்றுக்கு நூறு பலவீனங்களே நிறைந்தவர் என்றோ அல்லது பலங்கள் மட்டுமே கொண்டவர் என்றோ ஒருவரை அடையாளப்படுத்தவே முடியாது. அப்படி நாம் அடையாளப்படுத்திக் கொண்டால், அது நமது பலவீனத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்!
தொலைவிலிருந்து பார்த்து ஒருவரின் திறமைகளைக் கண்டு வியந்து நிற்போம்; கொஞ்சம் நெருங்கிப் பழகத் தொடங்கும்போது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது பலவீனங்கள் தெரியவரும்; நம் மனத்தில் இருக்கும் அவரைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் சரியத் தொடங்கும்; உயரிய பிம்பம் உடைந்து நொறுங்கும்; மனம் சலித்துவிடும்.
அதற்கு நேர்மாறாக, ஒன்றுக்குமே உதவாதவன் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனின் ஒரு செயல், அவனது பிம்பத்தை நம் மனத்தில் மிக உயர்த்திவிடும்.
நாம் பிறந்த கணம் முதல், நமது சூழல்களைப் பொறுத்து பலங்களும் பலவீனங்களும் நமது மனத்தில் படியத் தொடங்குகின்றன. அவைகளில் எது பலம் அல்லது பலவீனம் என்று தெரியாமலேயே நமக்குள் அவற்றை இறக்கி வைத்துக்கொள்கிறோம்.
பின்னர், இவை என் பலம்' என்று எண்ணுவனவற்றை, தைரியமாக வெளிப்படுத்துகிறோம்; 'இவை என் பலவீனம்' என்று சிலவற்றைக் காலப்போக்கில் அடையாளம் கண்டாலும், நீக்க முடியாமல் சிரமப்படுகிறோம்; இந்த பலவீனங்களைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக்கொள்கிறோம்!
நமது பலங்களை வளர்ப்பதும், பலவீனங்களை வீழ்த்துவதும் நமது தொடர்முயற்சிகளில்தான் இருக்கிறது.
கி.மு. 500களில் வாழ்ந்த சீன நாட்டு மாபெரும் அறிஞன் கன்ஃபூஷியஸ், கூறினார்:
மற்ற மனிதர்களுடன் பயணம் செய்யும் போதெல்லாம், அவர்கள் எல்லோரிடமிருந்தும் நான் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதை உணர்கிறேன். எப்போதும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அதன் மூலம், அவர்களிடமிருந்து உயரிய பண்புகளைக் கற்றுக் கொள்கிறேன்; அவர்களது தீய குணங்கள் ஏதும் என்னிடம் உள்ளனவா என்று பரிசோதித்துக் கொள்கிறேன். எனது பலங்களை வளர்த்துக் கொள்ளவும் பலவீனங்களைத்தாண்டி வரவும் அவை உதவுகின்றன.
வயதான முதியவர்களை கவனித்து பாருங்கள் ஒரு சிலர் எப்போதும் மலர்ந்த முகத்துடன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு, இளைஞர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு, எதையும் யாரையும் குறை சொல்லாமல், நகைச்சுவை உணர்ச்சி குன்றாமல் இருப்பார்கள்.
வேறு சில முதியவர்கள், எப்போதும் முகத்தைக் 'கடுகடுவென் வைத்துக்கொண்டிருப்பார்கள் எல்லோரிடமும் எரிந்து விழுத்துகொண்டு, எல்லாவற்றையும் குறைசொல்லிக்கொண்டு அல்லது சலித்துக்கொண்டு, எதையோ இழந்ததைப்போலவே எப்போதும் இருப்பார்கள்.
இவர்களில், முன்னவர்கள் பலவீனங்களைக் களைந்து பலங்களை வளர்த்துக்கொண்டவர்கள்: பின்னவர்கள், பலங்களை அடையாளம்கூடக் காணாமல், தமது பலவீனங்களையே வளர்த்துக்கொண்டவர்கள்!
நம்மிடம் இருக்கும் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் கண்டு, பலவீனங்களைக் களைந்து எருவாகப்போட்டு பலத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும் போராட்டத்தை நமக்கு நாமே எப்போதும் நடத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும்.