
உரத்த குரலில் கத்திப் பேசுபவர்கள், நிறுத்தாமல் லொட லொட வென்று பேசுபவர்களுக்கு மத்தியில் அமைதியாக இருப்பவர்களை பிறர் அவ்வளவாக கவனிப்பதில்லை. ஆனால் உண்மையில் உரத்துப் பேசுபவரை விட அமைதியாக இருக்கும் நபர்கள் அபாரமான ஆற்றல் மிக்கவர்கள். தேவையில்லாமல் பேசி தங்களது ஆற்றலை அவர்கள் வீணடிப்பதில்லை. அமைதியாக இருந்து அபாரமாக சாதிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
உற்று நோக்கும் இயல்பு;
அமைதியாக இருப்பவர்கள் நன்கு உற்று நோக்கும் இயல்புடையவர்கள். நுண்ணிய கவனிக்கும் சக்தி பெற்றவர்கள். பெரும்பாலும் பிறர் கவனிக்கத் தவறும் விஷயங்களை இவர்கள் கவனிக்கிறார்கள். தன்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் உடல் மொழி, பேச்சு மற்றும் பிற அந்த இடத்தின் அமைப்பு, பிற விவரங்கள் போன்ற நுண்ணிய விஷயங்களை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்.
கேட்கும் திறன்;
பேசுவதை விட அதிகமாக கேட்கும் திறன் பெற்றவர்கள். அதனால் இவர்களிடம் தங்கள் பிரச்னையை பகிர்ந்து கொள்ளலாம் என்று பிறர் விரும்புவார்கள். இதனால் இவர்மேல் பிறருக்கு வலுவான நம்பிக்கை உருவாகும்.
மனம் கவரும் பேச்சு;
மனதில் நினைப்பதை எல்லாம் அப்படியே வெளியே கொட்டாமல் சிந்தித்து நிதானித்துப் பேசுவதால் இவர்களது பேச்சு பிறரைக் காயப்படுத்தாமல் இருக்கும். அவசரப்பட்டு பேசாமல் பொறுமையாக சிந்தித்துப் பேசுவதால் இவரது பேச்சு பிறர் விரும்பக்கூடிய வகையில் இருக்கும்.
விரைவில் வெற்றி;
பெரும்பாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்கள். தங்கள் இலக்குகளை அடையத் தேவையான நேரத்தையும் முயற்சியும் செலவிட தயாராக இருப்பார்கள். அதனால் தாங்கள் ஆசைப்பட்ட விஷயங்களில் விரைவில் வெற்றி அடைந்து இலக்குகளை அடைந்துவிடுவார்கள். கவனச் சிதறல்களுக்கு இவர்கள் அவ்வளவு எளிதில் ஆளாவதில்லை.
சிக்கல் தீர்க்கும் திறன்;
பிரச்னைகளை சிறந்த முறையில் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். அதிக நேரத்தை பேச்சில் செலவழிப்பதற்குப் பதிலாக அமைதியாக இருப்பதால் தனக்கு நேரும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஆழமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த முடிவுகள் பெரும்பாலும் சிறந்தவையாகவே இருக்கும்.
பிடித்ததை செய்து சாதித்தல்;
இவர்கள் பிறரை மகிழ்விக்கும் பீப்பிள் ப்ளீசராக இருப்பதில்லை. பிறரை மகிழ்விக்க நினைப்பவர்கள் ஒருபோதும் தானும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. பிறரையும் மகிழ்ச்சிப்படுத்த முடிவதில்லை. ஆனால் அமைதி விரும்பிகள் மன அழுத்தத்திற்கு பொதுவாக ஆளாவதில்லை. தனக்குப் பிடித்ததை செய்கிறார்கள். தனக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். அதனால் அவர்களால் பல சாதனைகளை செய்ய முடியும்.
சிறப்பான செயல்கள்;
அவசரப்பட்டு பல விஷயங்களை செய்வதற்கு பதிலாக நிதானமான நபர்கள் பெரும்பாலும் குறைவான விஷயங்களை செய்கிறார்கள். அதனால் அந்த செயல்கள் மிக சிறப்பாக அமைகின்றன. திடீர் முடிவுகளை எடுப்பதில்லை எந்த விஷயத்திலும் நன்மை தீமைகளை எடை போட்டு குறைவான அபாயங்கள் உள்ள முடிவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
உலகத்தில் உள்ள பிரபலமான பல நபர்கள் அமைதியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெக், புகழ்பெற்ற முதலீட் டாளரான வாரன் பஃபெட், ஹாரி பாட்டர் புத்தக ஆசிரியர் ஜே.கே ரௌலிங், மறைந்த புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் தமது அமைதிக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் உலக வரலாற்றில நிலைத்து நிற்கிறார்கள். எனவே அமைதி என்பது பலவீனம் அல்ல அது மிகப்பெரிய பலம்.