
வாழ்க்கை என்னும் வேகமாக பயணிக்கும் சூழலில் எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க வேண்டியதை யாராலும் தவிர்க்க முடியாது.
ஒருவருடைய எதிர்பார்ப்பு அதற்கு ஏற்ப தயாரிப்பு, நேர்மறை சிந்தனை இவை எல்லாம் மகிழ்ச்சி தரும் முடிவை அளிக்கும் என்று எண்ணுவதில் தவறில்லை. அப்படி எண்ணுவதுதான் உசிதம்.
ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில், முறையில் பிறரை மற்றும் மற்றவைகளை சார்ந்து இருப்பது அத்தியாவசியம் மட்டும் அல்லாது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
சந்திக்கும், பழக நேரும் அடுத்த நபர்களின் எண்ண ஓட்டங்கள், எதிர்பார்ப்புகள் கட்டாயம் நம்முடன் ஒத்துப்போகும் என்று திட்ட வட்டமாக கூறமுடியாது.
அதே சமயம் அப்படிபட்ட நபர்களை சந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருந்தால் என்ன மாதிரி ரிசல்ட் வரும் என்பதை முன் கூட்டியே கணிப்பது என்பதும் சுலபமில்லை.
பல சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள், உரையாடல்கள், கலந்து ஆலோசனைகள் ஆகியவறிற்கு பிறகும் ஏதோ ஒரு காரணத்தினால் முடிவு நமக்கு சாதகம் ஆகாமல் கை நழுவி போவதை பலர் அனுபவித்துள்ளனர். அனுபவித்து வருகின்றனர்.
இங்கு மனிதர்களின் பங்களிப்பை (contribution) தவிர முதலில் குறிப்பிட்ட மற்றவைகள் சாதகமான முடிவு வராததற்கு காரணமாக அமையலாம்.
உதாரணமாக தாங்கள் எல்லா வகையிலும் தயார் செய்து கொண்டு முன்னதாகவே கிளம்பி மீட்டிங் நடக்க வேண்டிய இடத்திற்கு (உள்ளூர் அல்லது வெளியூர்) செல்ல முற்படும் பொழுது போகும் வழியில் ட்ராபிக் ஜாம், ரயில், விமானம் தாமதமாக புறப்படுதல், போகும் கார் வழியில் மேஜர் ரிப்பேர் போன்ற தடங்கல்களினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சாதக முடிவு மாற வாய்ப்புக்கள் அதிகம். உங்கள் மீது எந்த குறைபாடும் (shortcomings) இல்லை என்றாலும் அத்தகையை முடிவுகள் உங்களுடைய திட்டங்கள், அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு தடையாக (hurdle) இருக்கும் என்றால் மிகையாகாது.
எனவே இத்தகைய எதிர்பாராத ஏமாற்றங்கள், தடங்கல்கள் அவைகளின் மூலம் ஏற்படும் நஷ்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு ஒதுக்க (ignore ) நடை முறை வாழ்க்கையில் பழகிக்கொள்வது அவசியம் ஆகின்றது.
அவ்வளவு சுலபம் இல்லை என்றாலும் நடந்ததை நினைத்து வருந்துவதால் பயன் எதுவும் இல்லை.
நடந்த நிகழ்வில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்வரும் காலத்தில் எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்து தயார் செய்து கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலிதனம்.
ஒதுக்குவது (ignore செய்வது) எவ்வளவு முக்கியமோ அதே போல் சூழ்நிலை தேவைக்கு ஏற்ப ஒதுங்குவதும் (to stand aside) முக்கியம்.
போட்டி, பொறாமை நிறைந்த மற்றும் முன்னேற துடிப்பவர்கள் நிறைந்த சூழ்நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுடன் அதிகம் பழகாமல் இருப்பது, குறைவாகவும், தேவைக்கு ஏற்ப விவாதிப்பதும் உங்களுக்கு நன்மை பயக்கும். அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து தள்ளி ஒதுங்கியிருப்பது சாலச் சிறந்தது. தவிர்க்க முடியவில்லை என்றால் புன்சிரிப்பை உதிர்த்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது உங்களுக்கு கட்டாயம் நன்மை பயக்கும்.
சூழ்நிலை தேவைக்கு ஏற்ப ஒதுக்கவும், ஒதுங்கவும் பழகுவதால் அனாவசியமான டென்ஷன்களில் இருந்து விடு படலாம். அதிகமான நேரம் விரையம் ஆவதை தவிர்க்கலாம். ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனதிருப்தியும் (derive self satisfaction) அடையலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடலாம். அனாவசிய வதந்திக்களைத் தவிர்க்கலாம் (avoid unnecessary gossips), அடுத்தகட்ட நகர்வுக்கு தேவையான கோணத்தில் செயல்பாடுகளை தொடங்கலாம்.
போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஒதுக்கவும், ஒதுங்கவும் திறமைகளை (skills) பழகிக் கொண்டு நடைமுறை படுத்துகிறார்களோ அவர்கள் பலன்களை பெற்று மகிழ்கிறார்கள்.