

இயற்கையை ரசிப்பது சுகம். அதனை அனுபவித்தால் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும், மனதுக்கு இதத்தைக் கொடுக்கும். வாழ்க்கையை படிப்பது வேள்வி. அதனைப் படித்தால் மட்டும் போதாது. நாம் அதனோடு ஒன்றி பயணிக்க வேண்டும். இல்லை யென்றால், எதிர்மறை திசையில் நம்மை அழைத்துச் சென்றுவிடும். என்வே, மனிதர்களாகிய நாம், வாழ்க்கையை வாழ்வியல் நூலகமாக கருத்தில் கொண்டு, அறம் சார்ந்து வாழ்வோம்.
வாழ்க்கையில் முயற்சிதான் ஆரம்ப பாடம். அதனை விரும்பி படிக்க வேண்டும். இந்த களம்தான், நம்மை முன்னிருத்தி முன்னேற்றிக் கொள்ள பயன்படக் கூடிய பக்கம். இதனை உணர்ந்து உள்வாங்கி, வாழ்க்கையை வெற்றிக்கு இட்டுச்செல்லுங்கள். முயற்சியில் வென்றவருக்கு என்றும் வராது இகழ்ச்சி.
சிலநேரங்களில் நமக்கு தனிமை தேவைப்படும். அப்போது தன்னுடைய வாழ்க்கையை புரிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும். ஏனெனில், புரிந்து கொள்ளும் வாழ்க்கையில் தான், தன்னை அறிந்து கொள்ளும் நிலையும், மற்றவர்களை எடை போட்டு பார்க்கும் திறமையும் நமக்குள் கிளர்ந்து எழுந்து, நம் தடங்களை பதித்து, அடுத்த கட்டத்துக்கு போகவைக்கும்.
திட்டமிட்டு செயலாற்றும்போது கூட, சிலசமயம் தவறுகள் நிகழும். அதனை திருத்திக் கொள்ள தவறிவிடக் கூடாது. ஏனென்றால், தவறுகள் திருத்த படவில்லை என்றால், திட்டமிடும் செயல் முழுமை பெறாது என்பதை மனதில் ஏற்றி, அதற்கேற்ப தங்கள் தவறுகளைக் களைந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. பணக் கஷ்டமோ அல்லது மனக் கஷ்டமோ எதுவும் வரலாம். எதையும் தாங்கும் இதயம் நமக்குள் உயிர்ப்புடன் இருந்தால், அதனை தாண்டி வருவது எளிதாக இருக்கும் என்பதை மனதில் நினைத்து, வலுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்று உணருங்கள். வெற்றியை நோக்கி பயணிக்கும் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எதிர்வினை சக்திகள் உங்களை வளர்ச்சியை பொறுக்க முடியாமல், ஏதாவது அஸ்திரம் ஒன்றை உங்கள் முன்னே எறிவார்கள். அப்போது கடலாக இருங்கள். உங்களை தாக்கும் எதிர்வினை கற்களும் வீழ்ந்து மறைந்துபோகும். அதனை எய்தவர்களும் காணாமல் போவார்கள் என்பதை நினைத்து எளிமையாக அதனைக் கடந்து வாருங்கள்
உங்களுக்குள் மறைந்து இருக்கும் நல்ல எண்ணங்களை, அரும்புகள் விரிந்து மலராக வாசம் வீசுவது போல், நம்பிக்கை கரங்கள் விரித்து, செயலாக்கம் செய்து வெற்றிக்கண்டு வாகை சூடுங்கள்.
நேரம் காட்டும் கடிகாரம், எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல், அதன் கடிகார முட்களின் நகர்வுகளைப் போல், வாழ்க்கையில், தடுமாறும் எந்த நிலைக்கும் ஆட்படாமல், அறம் சார்ந்து நல்வழியில் பயணத்தால், உயர்நிலை வருமே தவிர, தாழ்நிலை என்றும் வராது என்ற உண்மை அறிந்து தடம் பதியுங்கள்.
ஒரு நல்ல புத்தகம் படிக்கும்போது நமக்குள் நல்ல எண்ணங்களை விதைக்கும். ஒரு நூலகம் ஆலமர விழுதுகளாக இருந்து, வாழ்க்கையில் பற்றிக்கொண்டு முன்னேற உதவும். அதேபோல் நமக்குள் இருக்கும் நல்ல பண்புகள், சிறகுகளை விரித்தால், நம் வாழ்க்கையை உயர்த்தும். அதேபோல் வாழ்வியல் சிந்தனைகள் பின்பற்றி, வாழ்க்கையில் பயணித்தால், வாழும் காலம் உயரும்!