
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்'
-என்றார் வள்ளுவப்பெருந்தகை.
இந்தச் செயலை இவன் முடிப்பான் என்று நினைத்து அதனை அவனைச் செய்யுமாறு விட்டுவிடல் வேண்டும் என்பதுதான் இக்குறளின் பொருள். இதற்கான அளவுகோலாகப் பயன்படுத்தப்படுவது புதிதாக பணியில் அமர்த்தப்படும் இளைஞனின் கல்வித்தகுதி மட்டுமே.
ஒரு பாடத்தில் ஒரு இளைஞன் பொறியியல் பட்டப்படிப்புப் படித்திருக்கிறான். ஆனால் அதே பாடத்தில் மற்றொருவன் டிப்ளமோ மட்டுமே பெற்றிருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பொறியியல் பட்டம் பெற்றவனுக்கே பெரிய நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. அவனுக்கே கைநிறைய சம்பளத்தை வாரிவழங்குகின்றன. அதன்பின்னரே பணியில் அவனது திறமை சோதிக்கப்படுகின்றது. அதற்கு மூன்று மாதம், ஆறுமாதம் என்று கால அவகாசம் தரப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் அந்த இளைஞனின் திறமை நிரூபிக்கப்படாத பட்சத்தில் அவனுக்கு மிகப் பெரிய 'சலாம்' போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். பல நிறுவனங்களில் இந்தக் காட்சியை இன்று நாம் நேரடியாகவே கண்டுவருகிறோம்.
இதற்குக் காரணம் அவர்களுடைய பணியில் போதிய நேர்த்தி இல்லாமலும், ஒழுங்கில்லாமலும் இருப்பதுதான். மேலும் அவர்களது வேலையில் ஏராளமான கவனக்குறைவுகள். இதனால் பணியில் பிழைகளும், தவறுகளும், காலதாமதமும் இருக்கும். அவர்களது திறனை செய்யும் வேலையில் பிரதிபலிக்காமல் இருப்பார்கள்.
பணியில் முழுஈடுபாடு இல்லாமல் இருந்தால் இதுபோன்றுதான் நடக்கும். அப்புறம் காலம் முழுவதும் பதவி உயர்வோ, இதைவிட நல்ல, உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்போ கிடைக்காமல் அவஸ்தைப்பட வேண்டியதுதான்.
பலரிடம் இருக்கும் தவறு, அவர்களது உயரதிகாரி ஏதாவது அவசரமான, மிகமுக்கியமான பணி ஒன்றை அவர்களிடம் கொடுத்து, குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அதனைச் செய்து முடிக்குமாறு உத்தரவிடுவார். இவர்களும் அதனையேற்றுக் கொள்வார்கள். ஏற்றுத்தானே ஆகவேண்டும்!
ஆனால் உடனடியாக அந்தப் பணியைத் தொடங்காமல், ஏதோ ரொம்பவே டென்ஷனாக இருப்பதுபோல நினைத்துக்கொண்டு கான்டீனின் சென்று டீ குடிக்கச் செல்வார்கள். அப்புறம் 'தம்' அடிப்பார்கள். அப்போது அங்கு சந்திக்கும் நண்பர் களிடம் தேவையில்லாத அரட்டை அடிப்பார்கள்.
இப்படியே நேரமும், காலமும் வீணாகிப் போய்விடும். அப்புறம் இருக்கையில் வந்து அமர்ந்து அந்தப் பணியைத் தொடங்குவார்கள். அதற்குள் குறிப்பிட்ட காலஅவகாசம் நெருங்கிவிடும். மேலதிகாரி.
"என்னாச்சு?... என்னாச்சு?" என்று கேட்டபின்புதான் இவருக்கு டென்ஷன் ஏற்படும். எப்படியாவது சீக்கிரமாக அதனை முடிக்க வேண்டும் என்று அவசரப்படுவார். அதனால் பணியில் ஒழுங்கும், நேர்த்தியும் இயல்பாகவே தவறிப்போகும். கவனக்குறைவுகள் கண்டிப்பாக நடக்கும். அதன் காரணமாக பணியில் பிழைகள் உண்டாகும்.
இப்படிப்பட்ட காரணங்களால் நிர்வாகம் இவரை ஒரு திறமையற்ற பணியாளர் என்று முத்திரை குத்தி ஓரமாக ஒதுக்கி வைத்துவிடும். இது இவரது வளமான முன்னேற்றத்திற்கு மாபெரும் தடைக்கல்லாக மாறிவிடும்.
நேர்மை, தரம் போன்றவற்றிற்கு என்றுமே மதிப்பு அதிகம். அது மட்டுமல்லாமல் அது நிரந்தரமாகவும் இருக்கும். இது அழிக்கமுடியாத உண்மை.