

ஒருமுறை வாழும் இவ்வுலகில் அத்தகைய வாழ்நாளை ஆனந்தமாக கழிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது. "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்பது அப்பா அடிகளில் கருத்தாக உள்ளது. கவலை, சோர்வு போன்றவை நமக்கு தீங்கு தருபவையாக இருப்பதால், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ பழகிக்கொள்வதே மிகவும் சிறந்த வழியாகும்.
நமது உடலை கவலை செல்லரிப்பது போன்று அரித்துவிடும். இத்தகைய கவலை என்னும் கொடிய அரக்கனை துரத்தி அடிப்பதே வாழ்வில் வளம் சேர்க்கும் வழி. அதனால்தான் 'ஆட்கொல்லி' என கவலையை கூறுகிறார்கள். கவலைப்படுவதை அப்போதே மறந்து விடுவது நல்லது. எந்த ஒரு தனி மனிதனாலும் இந்த உலகில் தீர்த்துவிட முடியாது என்றாலும் சாதிக்க முடியும்.
நமது இலக்கை தீர்மானித்து ஒரு வரம்புக்கு உட்படுத்தி கட்டுப்பாட்டு உணர்ச்சியுடன் இருப்பது மனக்கவலையை நீக்குவதோடு மனம் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு வழியாகும்.
வாழ்க்கையில் எல்லாரிடத்திலும் அன்பு செலுத்தி நமது கடமைகளில் முழு கவனத்துடனும், புத்துணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டால் அதுவே மனதிற்கு மங்காத மகிழ்ச்சியை அளிக்க வல்ல ரகசியமாகும். இது நமது உள்ளத்தை துன்பமோ இன்பமோ பாதிக்காமல் இருப்பதற்கு மனதிற்கு கொடுக்கப்படும் பயிற்சியாக உள்ளது.
"பணி செய். பயனை எதிர்பார்த்து ஏங்காதே" என்ற கண்ணனின் வாக்கிற்கு இணங்க நம் உள்ளத்தில் அந்த எண்ணத்தை குடியமர்த்தி கொள்ள வேண்டும்.
ஆறானது ஆரம்பத்தில் எந்த இடத்தில் இருந்து பிரவாகம் செய்கிறதோ, அதைவிட உயர்ந்த இடத்தில் பாய முடியாது. ஒவ்வொரு நாளும் ஒருவன் என்ன நினைக்கிறானோ, அப்படியே அவன் வாழ முடியும் என்கிறார் பேரறிஞர் எமர்சன். ஒருவனுக்கு வெற்றியை உண்டாக்குவது அவனது எண்ணமாகத்தான் இருக்கிறது.
ஆகவே ஒவ்வொருவரும் அவரது வாழ்வில் இன்பமாக வாழ பிறருக்கு கேடு செய்யாத தூய்மையான எண்ணத்தினை நினைப்பது மிகவும் முக்கியமாகும். நல்ல எண்ணங்களை நினைக்க ஆரம்பிக்கும்போது உங்களை அணுகி இருக்கும் எல்லாவிதமான துயரங்களும் உங்களை விட்டு ஓடிவிடும்.
பேரரசனும் தத்துவ ஞானிமான மார்க்கஸ் அரேலியஸ் "நமது வாழ்க்கை என்பது நமது நினைவுகளால் ஆக்கப்படுவதுதான்" என்ற விதியையே மாற்றி அமைக்கும் அரிய கருத்தைக் கூறியுள்ளார்.
ஆனந்த நினைவுகளை நினைக்கும்போது ஆனந்தம் அடைகிறோம். துயர நினைவுகளை நினைக்கும்போது துயரம் உங்களை வந்தடைகிறது. பயந்தாங்கொள்ளித்தனமான நினைவுகள் பயப்படும்படியான பலனையேயே உங்களுக்கு கொண்டு வரும். தோல்வி எண்ணங்கள் உங்கள் நெஞ்சில் குடி கொண்டிருந்தால் தோல்விதான் பெறமுடியும். வெற்றி எண்ணங்களை நினைக்கும்போது தான் நாம் வெற்றி அடைகிறோம்.
சில வகைப்பட்ட மனிதர்கள் பிறர் தமக்குத் தீங்கு விளைவிப்பார்கள் என்று எப்போதும் கவலைப் படுகிறார்கள். இது வீண் மனப்பயத்தின் விளைவாகும். உங்களைப் பற்றி நீங்கள் அதிகமாக மதிப்பிடு வதே மற்றவர்கள் உங்களை மதிக்கவில்லை என்ற உணர்ச்சி எழுவதற்குக் காரணமாகும். மனவளம் சேர்க்கும் வழி நமது எண்ணங்களில்தான் உள்ளது. அதைக் கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை.