
நம் வாழும் கலைக்குத் தேவையானவை என்று பார்த்தால் மனிதக் கவர்ச்சி, நல்ல தோற்றம், உரையாடல், சுய சிந்தனை, நற்செயல், அன்பு, நட்பு என்பதுதான். இவற்றின் உள்ளே நம் வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தும் அடங்கிவிடும் என்று கூறலாம். அவை நம் வாழ்க்கையை எப்படி செப்பனிட்டு சீராக்குகிறது என்பதைக் காண்போம்.
மனிதக் கவர்ச்சி:
பொக்கை வாய், வழுக்கைத் தலை, மூக்குக் கண்ணாடி, மேலும் கீழும் அரை முழத்துண்டு இவற்றையே தமது தோற்றமாக கொண்ட காந்தியடிகள் நமது தேசிய பணிகளின் மூலமாகத்தான் மக்கள் மனதில் முதலில் இடம் பெற்றார். அதன் பின் அவர் தோற்றமே மக்கள் மனதில் கம்பீரமாக இடம்பெற்றது.
கரிய நிறம், கம்பீரமான உயரம், முழங்கை தாண்டிய கை கொண்ட சட்டை, வெள்ளை வேஷ்டி ஆகியவற்றைக் கொண்ட கருப்புக் காந்தி, தென்னகக் காந்தி என்று புகழப்பட்ட கர்மவீரர் காமராஜரின் பணிகள் மக்கள் மத்தியில் நிலை பெற்று அதன் பின் அவரது தோற்றப் பொலிவும் மக்களால் போற்றப்பட்டது. இவர்களுக்கு கம்பீரத்தை கொடுத்தது அவர்களின் திடமனதும் அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டும்தான்.
நல்ல தோற்றம்:
ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கு இணங்க மனிதனுக்கு தோற்றம் அவசியம். இலக்கிய பேராசான் ஜீவா அவர்கள் கதர் துணி உடுத்துபவர். அவர் பள்ளியில் படித்த பொழுது அவரின் தாயார் இறந்து விடவே, அவரின் தந்தையார் இவருக்கு மூத்த மகன் என்ற கணக்கில் தாயாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய சொன்ன பொழுது கதர்த்துணி புதிதாக கிடைக்காததால் சாதாரணமான புதுத்துணியை கொடுத்து உடுத்திக்கொள்ளச் சொன்னார்கள். இதனால் ஜீவா அந்த சடங்கை செய்யாமல் தன் தம்பியை விட்டு செய்யச் சொன்னாராம். தாயை விட தாய் நாட்டுப்பற்றும் அதை உணர்த்தும் அவரோட கதர் ஆடை தோற்றமும்.
உரையாடல்:
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உரையாடல் அவசியம். அந்த உரையாடலை எப்படி கைக்கொள்ள வேண்டும்? உரையாடும்போது கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் என்ன? எந்த இடத்தில் சுருக்கமாகவும் எந்த இடத்தில் விரிவாகவும் உரையாட வேண்டும் என்று தெரிந்து, சின்ன சின்ன வாக்கியங்களாக சொல்ல வந்ததை தெளிவாக உரைப்பதே நல்ல உரையாடல்.
தாழ்வு மனப்பான்மை:
நெப்போலியன் தோல்வியுற்றதும் அவனுடைய ஊழியர்களுக்கு எல்லாம் பிரிட்டிஷ் ஒரு ஆணையிட்டது. அதாவது இனிமேல் அவரை பேரரசர் என்று எவரும் அழைக்கக்கூடாது. 'ஜெனரல்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று. இதை கேள்வியுற்ற நெப்போலியன் சிரித்துக்கொண்டே என்னை எப்படி அழைத்த போதிலும் என்ன? நான் நானாகவே இருப்பேன் என்று கூறினார். ஆதலால் எந்த நிலையிலும் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்.
சுய சிந்தனை:
சிலர் எப்பொழுதும் எதிர்மறையாவும், நோய் நொடி சம்பந்தப்பட்டதும், துன்பங்கள் சம்பந்தப்பட்டதும், கெடுதல் செய்தவர்களை பற்றியது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. அவர்களைத் திருத்தவும் ,தான் தப்பிக்கவும் ஒரே வழி என்னவென்றால் அதுபோன்ற விஷயங்களை அடிக்கடி காது கொடுத்து கேளாமல் இருப்பதுதான்.
நற்செயல்:
ஒரு மனிதனின் வாழ்க்கை முறை, செயல்முறை அனைத்தும் மற்ற மனிதர்களின் சிந்தனையை ஒத்து இருப்பதில்லை. இருப்பவன் இல்லாதவர்களுக்கு உதவுவதன் மூலம் வாழ்க்கையில் இன்பத்தைக் காணலாம். வாங்குபவனுக்கு வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோமே என்று மனது கவலையுறும். ஆனால் கொடுக்கும் நிலையில் இருக்கிறோமே என்று கொடுப்பவனின் உள்ளமும், கைகளும் அழகு பெறும்.
அன்பு:
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் கொதித்த குழம்பு பாத்திரத்தை வெறுங்கையோடு இறக்கிய தாயைப் பார்த்து சிறுவன் கேட்டான். இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்பவர்களுக்குப் பெயர்தான் அம்மாவா?! -அது தானே அன்பு.
நட்பு:
உண்மையான நட்பு என்பது 'அகில உலகமும் ஒருவனை விட்டு நீங்கி வெளியே சென்று விடும்பொழுது அவனை நாடி எவன் முதலில் நுழைகின்றானோ அவன்தான் நட்பின் இலக்கணம்.