
ஒருவர் கையில் ஐம்பது ரூபாய் இருக்கிறது. அந்தக் காசினை அவர் என்ன செய்வார்? என்ன செய்வார் என்பது, அவர் யார் என்பதையும், அவரது அப்போதைய தேவையையும் பொறுத்தது. அவர் அடுத்த வேளை உணவிற்கே சிரமப்படுபவராக இருந்தால், அந்தக் காசினைச் சாப்பாட்டில் செலவழிப்பார். அவருக்குச் சாப்பாடு பிரச்னையில்லை. ஆனால், அவருடைய காலணி (செருப்பு) பிய்ந்து போயிருக்கிறது என்றால், அவர் அதை தைக்கவோ அல்லது புதிய காலணி வாங்கவோ பயன்படுத்தலாம்.
அல்லது, அவர் தினமும் வேலைக்குப் போகும் அவருடைய சைக்கிள் ரிப்பேர் ஆகியிருந்தால், அதைச் சரி செய்வதற்கு அந்தக் காசினை அவர் பயன்படுத்தலாம். இப்படியாக, அந்தச் சமயத்தில் இருக்கும் தேவையைப் பொறுத்து, செலவு அமையும்.
ஐம்பது ரூபாய் மட்டுமல்ல. அது போனஸ் பணம் ஆறாயிரமாகவோ அல்லது நிலம் விற்று வந்த லட்சம் ரூபாயாகவோ கூட இருந்தாலும், அணுகுமுறை இப்படித்தான் இருக்க முடியும். அந்தச் சமயத்தில் இருக்கும் தேவைகளிலேயே முக்கியமான தேவை எது? அதற்குத்தான் அந்தப் பணம் போகும். அதற்குத்தான் முதல் கவனிப்பு. அந்தத் தேவை நிறைவான பிறகு, பணம் மீதம் இருந்தால்தான் மற்றவற்றுக்கு. இதுதான் முன்னுரிமை கொடுப்பது என்பது.
இதுபோல ஒவ்வொரு நாளும் நிறைய இருக்கும். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியுமானால் நல்லது. இதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். நேரப் பற்றாக்குறை காரணமாக அல்லது பணப்பற்றாக்குறை காரணமாக, எல்லாவற்றையும் ஒரே நாளில் அன்றன்றே செய்ய முடியாது. அப்படி இருக்கையில் பலவற்றில் எதை முடிப்பது எதற்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்ற இந்த முடிவை நாம்தான் எடுத்தாக வேண்டும்.
இருக்கும் நேரம் மற்றும் பணத்திற்குள் எவற்றைச் செய்து முடித்தால் நமக்கு மிக அதிகபட்ச நன்மையோ அதைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதற்கு இரண்டு தகவல்கள் தேவை.
ஒன்று நாம் செய்து முடிக்க வேண்டியவை என்னென்ன என்கிற ஒரு முழுப் பட்டியல்.
இரண்டாவது நம் தேவை என்ன? எது முக்கியம்? என்கிற தெளிவு.
இரண்டும் வேண்டும். ஒரே ஒருநாளை பயனுள்ளதாக ஆக்குவதற்கு இப்படி அணுக வேண்டுமென்றால்... இருபத்து ஏழாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து நாள்களைப் பயனுள்ளதாக்குவதற்கு அதாவது குறைந்தபட்ச 75 வருட வாழ்க்கைக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முன்னுரிமை செய்வது எவ்வளவு அவசியம்.
எல்லாவற்றுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் இல்லை. எல்லா வேலைகளும் நமக்கு ஒரே அளவு பலனை தருவதில்லை.
பெரும்பாலும் 20 சதவிகிதல் காரணங்களே 80 பயன்களை உண்டாக்குகின்றன. மீதமுள்ள 80 சதவிகித காரணங்கள் எல்லாம் ஒன்று சேர்த்து வெறும் 20 சதவிகிதப் பலன்களையே உண்டாக்குகின்றன.
அப்படியிருக்கும்போது வெறும் 20 சதவிகிதக் காரணங்களில் கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றம் வேண்டும் என்றாலும் அதுவும் விரைந்து வேண்டும் என்றாலும் மிக அதிக மற்றும் நிச்சயப் பலன்கள் கொடுக்கும் காரணிகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இது அது என்று சிலர், திட்டம் எதுவுமில்லாமல், கேள்விப்படுவதை எல்லாம், சொல்லப்படுவதை எல்லாம் செய்வார்கள். நிறைய செயல்பாடுகள் மிகக் குறைவாக இருக்கும்.
மாற்ற வேண்டும். நாம் செய்வது எதுவும் மிகப்பெரிய பலனைத் தரவேண்டும். அப்படிப்பட்ட செயல் கண்டுபிடித்து அவற்றை ஆராய வேண்டும்.