
ஒவ்வொரு மதமும் தனிமனிதன் தன்னை உணர, அவன் கவனத்தை உள்நோக்கி திரும்புவதற்காக உருவானது. தனித்து விடப்படக் கூடாது என்று நீங்கள் ஒரு மதத்தை சேர்ந்தவராக ஆகிறீர்கள். அது பிறப்பால் இருக்கலாம். அல்லது விரும்பி தேர்ந்தெடுத்ததாக இருக்கலாம். பிறகு உன் மதம் பெரிதா என் மதம் பெரிதா என் தகராறுக்கு ஆளாகிறீர்கள். மதம் என்பது உலகுக்கு எந்த தீங்கையும் சொல்லித்தரவில்லை. வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கான வழிகளைதான் மதம் சொல்கிறது. ஆனால் குறிப்பிட்ட மதத்தோடு விலங்கிட்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்
ஒருவருக்கு ஆன்மீக ஆசை வந்தது. எது உயர்ந்த மதம் என கண்டுபிடித்து அந்த மதகுருவிடம் சீடராக முடிவு செய்தார். ஒரு நண்பர் மதகுரு ஒருவரிடம் அவரை அனுப்பினார். அவரை தலையை மழித்துவிட்டு வரச்சொன்னார்கள்.
காதில் வலிக்க வைத்து ஓட்டை போட்டு வளையம் மாட்டினார்கள். ஆரஞ்சு நிற உடை அணியச் சொன்னார்கள். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் இந்த நபர் இடம் மாற விரும்பி நண்பரிடம் போனார். அவர் நண்பரை காட்டுக்குள் அழைத்துப்போய் ஒரு மதகுருவிடம் விட்டார்.
அங்கு இவரிடம் "இங்கு பச்சைத் துணி அணியவேண்டும். முடியை வெட்டவே கூடாது. எவ்வளவு நீளம் தாடி வளர்க்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஆபரணங்கள் கூடாது " என்றார் மதகுரு. வளையம் நீக்கப்பட்டது. அவர்கள் மத வழக்கப்படி வேறு இடத்திலிருந்து சதையை எடுத்தார்கள். அது புண்ணானது. ஒரு மாதம் அந்த குருவிடம் இருந்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் திரும்ப அவர் நண்பரிடம் சென்றார். அவர் "மலைமீது இருக்கும் ஆச்ரமத்துக்குப் போ அவர்தான் சிறந்த குரு" என்றார்.
அந்த புதிய குருவைக்காண கால் வலிக்க மலை ஏறினார் இவர். அங்கே சீடர்கள் மொட்டை அடித்திருக்கிறார்கள் இரண்டு காதுகளிலும் வளையம் மாட்டியிருந்தார்கள். மூக்கிலும் துளையிட்ட இருந்தார்கள். இதைக்கண்ட இவர் மயங்கி விழுந்தார்.
மதங்கள் மாறினால் ஒவ்வொரு மதகுருவும் உங்கள் உடம்பில் துளையிட்டுப் போவதுதான் நிகழும். மதம் என்ற முகமூடி அணிந்து தன் அகங்காரத்தை நிலை நிறுத்தப் பார்க்கும் சில மதங்கள் உள்ளன. உள்நோக்கை கவனிக்காமல் வெளியே எத்தனை எண்ணிக்கை கிடைத்தது என்று எப்போது கவனம் போகிறதோ அப்போதே அம்மதம் செத்துப்போகிறது.
உங்கள் கடவுள் மேன்மையவர் என்பதை நிரூபிக்க உங்களை நீங்களே ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள். உங்கள் கடவுளுக்கு அதிக சக்தி இருப்தை நீங்கள் நம்பவில்லையா. ஆன்மிகம் உன்னதமானது. மனிதனை உய்விக்கப் பிறந்தது. தனக்குப் பின்னால் ஒரு கோடி ஆட்கள் இருந்தால் என்ன? ஒரு ஆள் கூட இல்லாவிட்டால் என்ன?.
உண்மையான ஆன்மிகத்தை நினைப்பவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. உண்மையில் உங்கள் மதத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மாற்றத்திற்கு வழி தேடாமல் மற்றவர்களை உங்கள் பக்கம் மாற்ற முயற்சி செய்வது உங்கள் மதத்தின் குறிக்கோளையே அவமதிப்பதாகும்.
ஒவ்வொரு மனிதனும் மேன்மையானவராக மாறினால் மட்டுமே ஒட்டு மொத்த உலகமும் மேன்மையடைய முடியும். உங்கள் மதம் மூலம் உண்மையை உணருங்கள் உயர்வடையலாம்.