
மனிதர்களது நேர்மையை அவர்களது ஒழுக்கத்தில் இருந்துதான் கணக்கிட முடியும். அவர்கள் செய்கின்ற தொழில்களை வைத்து அளவிட முடியாது. வள்ளுவன் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றான்.
நம்முடைய வெற்றியும் தோல்வியும் கூக்குரல் நிறைந்த போலியான வாழ்த்தொலிகளிலேயும் கூட்டங்களின் கைதட்டல்களிலேயும் இல்லை. அவை உங்கள் ஒழுக்கத்திலேயே இருக்கின்றன என்றான் புதுக்கவிதைக் காவலன் வால்ட் விட்மன்.
எனவே ஒழுக்கத்தை உயிரைவிட மேலாகக் கருதி கடைப்பிடியுங்கள். எல்லா நற்பண்புகளுக்கும் மூலக்கரு ஒழுக்கமே.
சங்கரரும், ரமணரும், அன்னை தெரெசாவும் பிறக்கும்போதே மாகாத்மாவாக தவசீலர்களாக பிறக்கவில்லை. காந்தியார் கூட தவறுகள் செய்தவர்தான். அவரைக் கூட ஒரு ஹரிச்சந்திரன் நாடகமும் ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம் (Unto this Lost) என்ற புத்தகமும்தான் மகாத்மாவாக்கிக் கொடுத்தது என்று காந்தியாரது "சத்திய சோதனை" சங்கீதம் பாடிச்சொல்கிறது.
எனவே ஒழுக்கத்தை உடலின் அங்கமாக்கிக் கொள்ளுங்கள்.
'பிடிவாதத்தின்' மேல் பாசம் வையுங்கள். நியாயங் களையும் சத்தியத்தையும் என்றுமே காத்து நிற்பேன் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலேயும் இந்த நிலையிலே இருந்து தவறாதீர்கள். இத்தகைய கொள்கைகளில் அழுத்தமான பிடிவாதத்தைக் கடைபிடியுங்கள்.
மனச்சாட்சி ஒத்துக்கொண்ட செயல்களில் திடமான நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, பிறருக்காக உறவு முறைகளுக்காக கையூட்டுக்காக, சின்னஞ்சிறு சபலங்களின் சுகத்திற்காக, இயல்புகளை மாற்றிக் கொள்ளாத பிடிவாதக் குணம் உங்களுக்குள் வந்தாக வேண்டும்.
வெள்ளையர் ஆதிக்கம் இந்த மண்ணிலே வேரூன்றிய காலம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காந்தியாரை பேச்சு வார்த்தைக்காக லண்டன் நகருக்கு அழைத்தது. மகாராணியாரைப் பார்க்க வேண்டுமானால், பார்க்கச் செல்வோர் சிலபல சம்பிரதாயங்களான ஆங்கிலேய பிரபுக்களின் உடை அணிந்து தான் பார்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த காலம்.
காந்தியிடம் "உடை" விஷயத்தைக் கூறி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் காந்தியார் "இந்த உடை எங்கள் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது. உடையை மாற்றிக்கொண்டுதான் வரவேண்டும் என்றால் மகாராணியாரின் சந்திப்பை இழக்கவும் தயங்கமாட்டேன் என்றார். இந்தப் பிடிவாதம்தான் மகாராணியாரை மண்டியிடச் செய்தது.
சுயக்கட்டுப்பாடு மனத்தை பக்குவமாக வைத்துக்கொள்ள உதவும். நமது ஆற்றலையும் திறமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மனக்கட்டுப்பாடு. அன்பு, நாணம், உலகத்தாரோடு ஒட்டி உறவாடுதல் அருள் புரிதல், உண்மை பேசுதல் இவற்றை சான்றோர் பண்பு என்பார் வள்ளுவர்.
நமது செயல்கள் எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் பெறுகிறதோ, அதன் எதிரொலியாகத்தான் நமது சிறப்பும் பெயரும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். தனக்குத்தானே சோதனை செய்து வென்றதாலேயே காந்தியார் மகாத்மாவாக பூஜிக்கப்பட்டார்.
ஆகவே சில பழக்கங்களை வழக்கமாகக் கொண்டால் நீங்களும் மகாத்மா ஆகலாம்.