

பெரும்பாலான மனிதர்கள் நிகழ்காலத்திற்கு மட்டுமே உழைக்கின்றனர். சிலர் எதிர்காலத்திற்காகவும் உழைக்கின்றனர். அறிவாளிகள் மட்டுமே இரண்டிற்காகவும் உழைக்கிறார்கள். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்திலும் நிகழ் காலத்திற்காக எதிர்காலத்தை நாடியும் உழைப்பார்கள்.
நமக்கு இயற்கை அளித்த நுண்ணறிவை கொண்டு எதிர்காலத்தை உள்ளறியும் உரிமை உண்டு. இவ்வுரிமையின் பயனாக வருங்காலத்திற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்யும் கடமையும் நமக்கு இருக்கிறது.
செல்வ வளத்தையும் நல்வாழ்வையும் பெரும் ஆற்றல் எல்லாருக்கும் இருந்தாலும், அவற்றை பெறவும் காக்கவும் அவர்கள் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். உண்மையிலேயே சம்பாதிப்பதற்கு வேண்டிய திறமையைவிட செலவிடுவதற்கு வேண்டும் திறமையே பெரியதாகும்.
நம்முடைய செலவுகள் பயனுடையதாக இருக்க வேண்டுமானால் குறைந்த செலவில் நிறைந்த பயன் தேடவேண்டும். ஆகவே முடிந்தவரை நிறைந்த பயனை நாடியே செலவு செய்ய வேண்டும்.
அதிலும் மிகவும் இன்றியமையா செலவான சேமிப்பு திட்டத்தை வகுக்க வேண்டும். நமது வாழ்க்கைத் தரமும் மதிப்பும் இத்தகைய சேமிப்பினால்தான் உயர்கிறது. திட்டமிட்ட செலவு செய்வதன் மூலமும் சேமிப்பதன் மூலமும் ஒரு தொழிலாளி கூட செல்வமிக்க முதலாளியாக முடியும்.
மிகத் திறமை வாய்ந்த முதலாளிகள் கூட ,இதே போல் திறமை மிக்க உழைப்பாளியாய் இருந்து பணம் திரட்டியவர்களே என்பதுதான் உண்மையிலும் உண்மை.
மேலும் பொருட்செலவு சிக்கனத்தைவிட, கால சிக்கனமும் மிகவும் முக்கியமானது. காலம் பொன்னை விட மதிப்பு உயர்ந்தது. பொன் போனாலும் ஈட்டிக்கொள்ளலாம். காலம் போனால் மீட்டு பெறமுடியாது. அதனால் காலத்தை நன்கு பயன்படுத்துபவன் மட்டும்தான் ஓரளவு நீண்ட வாழ்வு பெறும் வாய்ப்பு பெற முடியும்.
காலம் பணம் தேடுவதற்கு மட்டுமல்ல. அதற்கான திறமை, அறிவு, அதைக் காத்து பயன்படுத்துவதற்கான பண்பு, நல்ல பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பெறுவதற்கும் பயன்படுத்த படத்தக்கதாகும்.
காலத்தை வைத்து நல்ல செயல்கள் பெருந்தன்மையான செயல்கள் செய்து புகழ் மற்றும் பணத்தை சேமிக்கலாம். சிக்கனம் இன்பத்தை தந்து ஆதாயத்தையும் தருகிறது சிறிய முன் முயற்சி இருந்தாலே காரியத்தை மிக எளிதாக்கும் சிக்கன வாழ்வு பயனுடையது.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்ப்பதல்ல சிக்கனம். சரியான காரியத்திற்கு ஒழுங்காக செலவழிப்பதே சிக்கனமாகும்.