
இரவு, பகல் இயற்கையின் விதி என்பதுபோல மனிதருக்கு துன்பம், இன்பம் என்பது இயல்பான ஒன்று. ஒரு சிலர் இன்பம் வந்தால் தலைகால் புரியாமல் குதிப்பதும், துன்பம் என்றால் தலையில் இடி விழுந்ததுபோல் துடிப்பதும் வழக்கம். ஆனால் அனைத்தையும் சரிசமமாக ஏற்று வாழ்ந்தால் மட்டுமே நம்மால் வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறமுடியும்.
துன்பம் நமது முன்னேற்றத்தை தடுக்கும் முட்டுக் கட்டையாக மாறிவிடக்கூடாது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவருக்கு வெற்றி என்பது துயரங்களின் மேல் கட்டப்பட்ட கோட்டையாக கூட இருக்கலாம். எல்லா வசதிகளும் கொண்ட ஒருவர் பெறும் வெற்றி அவ்வளவாக கவனிக்கப்பட மாட்டாது. அதேசமயம் துயரங்கள் கொண்ட ஒருவரின் வெற்றி என்பது உலக அளவில் பேசப்பட்டு மற்றவர்களை ஊக்குவிக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜுபைதா ஹசன் எனும் பெண் இதற்கு நல்ல உதாரணம்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜுபைதா ஹசன் 9 வயதாக இருக்கும் போது (ஆகஸ்ட் 2001) வீட்டில் இருந்த சமையலறையில் அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்ற முயற்சித்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தார்.
ஈரானில் உள்ள மருத்துவர்கள் அவரது தந்தையிடம் அவர் சீக்கிரம் இறந்து விடுவாள் எனவே வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். நடந்தது வேறு. அந்த சிறுமி பிழைத்துக்கொண்டார்.
ஆனால் காயங்களினால் ஏற்பட்ட பாதிப்பு மிக பயங்கரமாக இருந்தது. தீயினால் பாதிக்கப்பட்ட முகத்தின் தோல் இழுக்கப்பட்டு, அதனால் நிரந்தரமாக மூட முடியாத வாய் மற்றும் கண்களோடு,
காணவே அஞ்சும் கோரமான உருவத்தோடு மனம் நிறைய வேதனைகளை சுமந்து நரக வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜுபைதா ஹசன். தன் மகளின் வேதனையை காண சகியாமல் அவர் தந்தை (2002 ஆம் ஆண்டு) தன் நண்பரிடம் மகளுக்கு மருத்துவ உதவி கேட்க
அவர் அமெரிக்க ராணுவ மருத்துவக்குழுவிடம் அழைத்து சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவரின் பரிந்துரையில் ஒரு தொண்டு நிறுவனம் அவளை அமெரிக்காவின் கிராஸ்மேன் பர்ன் சென்டருக்கு அழைத்து வந்தது, (2003) அங்கு அவருக்கு ஒரு வருடத்தில் 12 பெரிய அறுவை சிகிச்சைகளைச் செய்த மருத்துவர்களின் உதவியுடன் 3 ஆண்டுகளுக்குள், அவருடைய முகமும் வாழ்க்கையும் மாறின. மனதில் உறுதியுடன் இன்று அவர் தீக்காயங்களில் இருந்து தப்பியவர்களுக்கும் கிராஸ்மேன் தீக்காய அறக்கட்டளைக்கும் தூதராக தொடர்ந்து பணியாற்றி உலகத்தின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
ஒரு சிறு துளி நெருப்பு நம் மீது பட்டால் நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் சிறுமியாக இருந்த போதும் அத்தனை அறுவை சிகிச்சைகளுக்கும் ஒத்துழைத்து மனம் தளராமல் தான் குணமாகிவிட வேண்டும் என்ற தைரியத்துடன் தீக்காயங்கள் தந்த உடல் வலியை மனவலிமை கொண்டு எதிர்த்துப் போராடி சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் வெற்றிப் பெண்ணாக உலா வருகிறார் இந்த சாதனைப் பெண். (Motivational articles)
மனம் வருந்தும் நீண்ட கால காத்திருப்புக்கு பின்னும் உடல் வருத்தும் காயங்களுக்கு பின்னும் வலி நிறைந்த வாழ்க்கை கூட நம்மிடம் நம்பிக்கை இருந்தால் அழகாக மாறும். துயரங்களை தூசாக்கி துணிச்சலுடன் வாழப் பழகினால் எந்நிலையிலும் வெற்றி சாத்தியமே.