
அனைவருக்கும் எதையும் கற்றுக்கொள்வதில் பல விதங்கள் இருக்கும். படங்கள் பார்த்து, ஒசைகள் கேட்டு அல்லது சிலவற்றை செய்து பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.
கற்றுக்கொள்வது என்பது பலரும் நினைப்பதுபோல் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் நின்றுவிடும் சமாச்சாரம் இல்லை.
நம் வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். குறிப்பாக நாம் வேலைக்குச் சேர்ந்தவுடன் புதிதாக ஒரு உலகத்தினுள் நுழைவதுபோல் உணருகிறோம். அது வரை நாம் கற்றுக் கொண்டதில் மிகக்குறைந்த அளவே அங்கு தேவைப்படும்.
பல புதிய சூழ்நிலைகள், புதியமனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதத்தில் வித்தியாசமான மனிதர்கள், புதுமையான செயல்பாடுகள் என்று அனைத்தும் மாறுபட்டு இருக்கும். அந்தச் சூழலுக்குள் நாம் நுழையும்போது நாம்தான் அந்தச் சூழனுக்கு ஏற்றவகையில் நம்மை மாற்றிக் கொள்ள புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சுற்றுக்கொள்கிறோம் என்று மிகவும் எளிதாக நாம் சொல்லிவிட்டாலும் கற்றுக்கொள்ளும் விதம் ஆளுக்காள் வேறுபடுகிறது. நியாமாகப் பார்த்தால் குழந்தை பருவத்திலேயே நாம் இதை கவனிக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கியமாக செய்யவேண்டிய வேலை இது. மேலை நாடுகளில் ஒரு குழந்தையின் கிரகிக்கும் தன்மை மற்றொரு குழந்தையின் கிரகிக்கும் தன்மையிலிருந்து வேறுபடுகிறது என்பதைக் கண்டறிந்து அந்தந்தக் குழந்தைக்கு ஏற்பக் கற்றுக்கொடுக்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறது.
இந்தியாவிலும் ஒரு சில வசதியான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். வளர்ந்த பிறகும் நம்முடைய கற்றுக்கொள்ளும் திறன் ஆளுக்காள் மாறுபடுவதை நாம் அறிவோம்.
சிலருக்கு அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் போதுகூட யாரும் பேசாமல் அமைதியாக இருந்தால்தான் படிக்க முடியும். யாராவது அந்த நேரத்தில் பேசினாலோ தொலைக்காட்சி அல்லது வானொலி எதையாவது சப்தமாக வைத்தாலோ அவர்களால் தொடர்ந்து செய்தித் தாளைக் கூட கவனத்துடன் படிக்க முடியாது.
மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவிற்கு எழுத படிக்கவே தெரியாது.
ஆனால் எத்தனை பக்கங்களில் அவருக்கு வசனம் கொடுத்தாலும் திக்கித் தடுமாறாமல் தெளிவாகப் பேசுவார். அவர் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பார். அவர் அருகில் துணை இயக்குனர் அமர்ந்து வசனங்களைப் படிப்பார். எம். ஆர். ராதா கண்களை மூடிக் கொண்டு முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார். அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம் ஆகிவிடும். இந்த மாதிரி கேட்டுக் சுற்றுக் கொள்பவர்கள் ஒரு ரகம்.
இந்த மாதிரி ஒரே குணம் படைத்த மாணவர்கள் ஒரு இடத்தில் குழுமி ஒருத்தர் படிக்க மற்றவர்கள் கேட்டுக்கொண்டே படித்துவிடுவார்கள். ஆனால் இந்த முறைக்கு உங்களுடைய கவனம் நூறு சதவிகிதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கற்றுக் கொள்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எந்த முறையில் கற்றுக்கொண்டால் சரியாக பிரகாசிக்கிறோம் என்று தெரிந்துகொண்டு அந்த முறையையே காலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.