

நம்பிக்கை, நாணயம், கைராசி.
இது 'லலிதா ஜூவல்லர்ஸ்' இன் விளம்பர உத்தி என்று நீங்கள் நினைத்தால், அது நமக்கு புத்தியை கொடுக்கிறது என்று நான் சொல்கிறேன்! உங்களால் நம்ப முடிகிறதா?
மேலே சொன்ன அந்த மூன்று 'காரணிகளும்' நம்மிடையே இருக்கின்றன. இவை நம்முடைய இருப்பை உணர்த்தும் 'விழுமியங்கள்'.
இவற்றையெல்லாம் நாம் கவனித்து வலுப்பெற செய்து, வளம் பெற்று, மதிப்பு கூட்டி நாம் வாழ வேண்டுமானால் அதற்கு நம்மிடையே முதலில் நம்பிக்கை பிறக்க வேண்டும்.
இவையெல்லாம் நம்மிடையே இருக்கிறது. இவற்றை தேடி நாம் எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை. இவையெல்லாம் வெளியில் இருந்து பெற வேண்டுமானால் அதற்கு ஒரு குரு தேவை. அந்த குருவை நாம் முதலில் நம்ப வேண்டும்.
அந்த குரு தன்னுடைய ஆன்மீக ஆற்றலை நம்மிடம் செலுத்துவதற்கு தயாராக இருக்கும்போது, அதனை உள்வாங்கி செயல்பட ஒரு புரிதல் வேண்டும்.
குருவானவர் தன்னுடைய செயலை பின்வருமாறு வெளிப்படுத்துவார்.
1. நயனம்
2. தொடுதல்
3. சிரிப்பு
4. சிறு உரையாடல்கள்....
இவற்றை புரிந்து கொண்டு நாம் செயல்படும்போது நம்மிடையே அந்த ஆற்றலானது சிறிது சிறிதாக வெளிப்படும்.
உதாரணத்திற்கு ஒரு கதையை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இரண்டாவது உலகப் போரில் ஒரு அமெரிக்கன் தன் சக போராளி காயப்பட்டு துன்பத்தால் துடித்துக் கொண்டு இருக்கும்போது ஒரு காரியத்தை செய்தான்.
அதுதான் 'placebo effect' என்று சொல்லப் படுகிறது.
விஷயம் என்னவெனில்; அவனுக்கு தன்னிடம் இருந்த ஒரு ஊசியை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி, அந்தப் போராளியிடம் இதில் உள்ள pain killers உன் வலியை வெகுவாக குறைக்கும்; நாம் பிறகு பக்கத்தில் உள்ள பதுங்கு குழியில் சென்று முதல் உதவி பெற்று விடலாம் என்று சொல்லி அதை செலுத்தியவுடன் தன் சக வீரன் நம்பியதன் விளைவு அவனுக்கு பெரும் சக்தியாக மாறி உடலை காப்பாற்றியது.
இதை விஞ்ஞான ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், நம் மூளையில் உள்ள முற்பகுதி நம் வார்த்தைகளை, நம் எண்ணங்களை முழுவதுமாக உள்வாங்கி அதற்கு நேர்மறையாக வினையாற்றி உடலை காப்பாற்ற வல்ல 'anti immuno bodies' உருவாக்குகிறது என்று பிறகு கண்டுபிடித்தனர்.
இதன் மூலம் தான் நாம் இந்த 'உளவியல்' உண்மையை தெரிந்து கொண்டோம்.
'இறைவன்' அல்லது 'பரம்பொருள்' அல்லது 'பிரபஞ்சம்' நம் ஒவ்வொருவரையும், தனித்திறமையுடன் படைத்து அதனை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவகாசத்தையும் அள்ளித் தந்து விட்டு சென்று உள்ளது.
அதனைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய 'அறிவு' நம்மிடம் தான் இருக்கிறது.
அதற்கு வேண்டிய 'நாணயம்'- நேர்மை, பொறுமை, சத்தியம் எல்லாம் ஒருவனிடம் இருக்கும் போது அது நிச்சயம் வெளிப்படும்.
அதை நாம் 'கைராசி' என்று சொல்கிறோம்.
காலத்திற்குள் கைராசி இருக்கிறது.
காலத்தை அறிந்து, அதற்கான 'இருப்பை' உணர்ந்து, உள்ளதைக் கொண்டு நிறைவு பெற்று, அல்லதை விட்டு அகன்று நம்மை செழுமை படுத்தி கொள்ள முடியும்.