வாழ்க்கையில் சில நேரங்களில் கண்ணாடியின் முன் நிற்கும் போது, நாம் நினைத்த நபராக இல்லை என்ற உணர்வு தோன்றும். என்னுடைய 20 வயதில் எனக்கும் இந்த தவிப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு வெற்றிடம் எனக்குள் இருப்பதை நான் ஆழமாக உணர்ந்தேன். அந்த அசெளகரியமான உணர்வு தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் முதல் படியாக அமைகிறது. இதை ஒரு விழிப்புணர்வு என்று கூட சொல்லலாம்.
உள்ளே நடக்கும் யுத்தம்!
மாற்றம் என்பது வெளியில் நடக்கும் ஒரு செயல் அல்ல. அது நம் மனதிற்குள் நடக்கும் ஒரு மிகப்பெரிய புரட்சி ஆகும். பிரபல மனநல நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) இதைப்பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். சிதறிக் கிடக்கும் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கும் போது தான் உண்மையான தெளிவு பிறக்கிறது. பழைய சிந்தனைகளை உடைத்து புதிய பாதையை உருவாக்குவது எளிதான காரியம் கிடையாது.
நமது மூளை எப்போதும் பழைய பழக்கங்களையே விரும்பும். ஆனால் உண்மையில் மனிதன் தனது முழு திறனையும் உணரும் போது தான் முழுமை அடைகிறான். அதே பழைய வட்டத்திற்குள் சுழல்வதை விட, புதிய வலிகளை ஏற்றுக்கொள்வது சிறந்த முடிவாகும். பழைய நம்பிக்கைகளை நாம் மெதுவாக மாற்றும் போது நமது மூளையின் நரம்பு மண்டலமும் புதிய பாதைகளை உருவாக்கிக் கொள்கிறது.
பழக்கங்களை உடைக்கும் டிப்ஸ்!
நாம் மாற நினைக்கும் போது நமது மனம் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கும். புதிய விஷயங்களை செய்ய மனம் அவ்வளவு சீக்கிரம் ஒத்துழைக்காது. இது சோம்பேறித்தனம் கிடையாது. மூளை தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் ஒரு உளவியல் சுழற்சியாகும். நமது சுபாவத்திற்கு மாறாக நடக்கும் போது ஏற்படும் இந்த மன அழுத்தத்தை நாம் சற்று பொறுமையோடு கடந்து செல்ல பழக வேண்டும்.
நமது அடையாளத்தை முதலில் மாற்றிக் கொள்வது தான் மிக முக்கியம். நான் இப்படித்தான் என்ற எண்ணத்தை முதலில் உடைத்தெறிய வேண்டும். உண்மையான சுய மாற்றம் என்பது செயல்களில் அல்லாமல் நம்முடைய அடையாளத்தில் இருந்து தொடங்க வேண்டும். என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை நான் சரியாக கவனித்து மாற்றி அமைத்த போது தான், எனது எண்ணங்களிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
வலியை கடந்து வாருங்கள்!
இது ஒரு நேர்கோட்டுப் பயணம் கிடையாது. சில நாட்கள் நாம் முன்னேறிச் செல்வோம், சில நாட்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவோம். ஒரு பழைய வேலையை விடுவதோ அல்லது ஒரு உறவை முறித்துக் கொள்வதோ மிகுந்த வலியைத் தரலாம். ஆனால் இந்த இடைப்பட்ட காலம் மிகவும் அவசியமானது. நமது ஆழ்மனதில் உள்ள ரகசியங்களை நாம் தைரியமாக நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.
மாற்ற முடியாத சூழ்நிலைகளை சந்திக்கும் போது நாம் நம்மையே மாற்றிக் கொள்ள நினைக்கிறோம். வலியின் உண்மையான அர்த்தத்தை உணரும் போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. இந்த சுய மாற்றம் ஒருபோதும் முடிவடையாத ஒரு நீண்ட பயணமாகும். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பழைய நினைவுகளையும் காயங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழப் பழக வேண்டும். நம்முடைய உண்மையான சுபாவத்தை உலகிற்கு காட்ட எந்தவித தயக்கமும் படக்கூடாது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சறுக்கலும் நம்மை பட்டை தீட்டும் ஒரு அனுபவம் தான்.
வெறும் பார்வையாளராக இல்லாமல், ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ்ந்து நம்மை நாமே சிறந்த மனிதராக பரிணாம வளர்ச்சி அடையச் செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும்.