
சாதகப் பறவை மழை நீரை மட்டுமே அருந்தும். புண்ணிய நதிகளில் ஏராளமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் பூமியில் படிந்த நீரை அப்பறவை அருந்தாது. அவ்வாறே இறையருளில் நாட்டம் உள்ளவர்கள் எப்போதும் அவனது அருளையே நாடி நிற்பர்.
பட்டாணி கடலை ஒன்று சாணக் குழியில் விழுந்து முளைத்தாலும் பட்டாணியின் இயல்பை அது இழந்து விடுவதில்லை. அதுபோல் சான்றோர் விதி வசமாய் கீழ்குடியில் பிறந்தாலும் அவர்களது மேலான இயல்பு அழிந்து விடுவதில்லை.
ஒரு சல்லடை நல்ல பொருட்களை எல்லாம் நழுவ விட்டுவிட்டு பயன்படாதவற்றையெல்லாம் தன்னுள் வைத்துக் கொள்கிறது. கயவர்கள் சல்லடை போன்றவர்கள் நல்ல எண்ணங்கள் அவர்கள் மனதில் நிலைத்திருப்பதில்லை.
சேற்று மீன் சேற்றினுள் புதையின்றி கிடந்தாலும் அம்மீனின் மீது சேறு படிவதில்லை. அதேபோல் மனிதன் உலகில் வாழ்ந்து இருக்க வேண்டும். ஆனால் உலகப் பற்றினுள் அவன் தோய்ந்துவிடக்கூடாது.
ஒட்டகம் முட்செடியை தின்று வாயிலிருந்து ரத்தம் சொட்டி கொண்டிருப்பினும் முட்செடியை தின்பதை அது நிறுத்துவதில்லை. உலகத்தவர் எத்தனை எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாயினும் உலகப்பற்றை விட்டுவிட அவர்களால் முடிவதில்லை.
தாமிரப் பாத்திரம் ஒன்றைத் தினந்தோறும் துலக்கவேண்டும். இல்லையேல் அதில் களிம்பு ஏறுகிறது. மனம் தாமிரப் பாத்திரம் போன்றது. நாள்தோறும் நல்ல எண்ணங்களாலும் பிரார்த்தனையாலும் அதை துலக்கி வைத்திருக்க வேண்டும்.
பலாப்பழத்தை அரிவதற்கு முன்பு கையில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலாப்பழத்தின் பிசின் கையில் ஒட்டிக்கொள்ளும். உலக வாழ்க்கையில் புகுவதற்கு முன் மனதைத் தெய்வ பக்தியில் ஊறியிருக்கும்படி செய்யவேண்டும் இல்லாவிட்டால் உலக பற்று என்னும் பிசின் மனதை துன்புறுத்தும்.
பயன்படாத சேற்று நீரை தேற்றாங்கொட்டையைக் கொண்டு தெளிநீர் ஆக்கலாம். உலகத்தவருடைய மனமோ சேற்று நீர் போன்றது. விவேகத்தையும் வைராக்கியத்தையும் புகட்டினால் அவர் மனம் தெளிவடையும்.
வெட்கம் வெறுப்பு அச்சம் ஆகிய மூன்றுக்கும் ஆளாக இறைவன் ஒருபோதும் மேன்மை அடைவதில்லை.
சுவரெங்கும் கரி படிந்துள்ள அறையில் வசிக்கும் ஒருவன் எவ்வளவோ எச்சரிக்கையுடன் இருந்தபோதிலும் அவன் மீது கொஞ்சமாவது கரி படிந்துவிடும். உலகில் வசித்திருப்பவனுக்கு அப்படி ஏதேனும் ஒரு விதத்தில் இடையிடையே துன்பம் வரும் அதை தவிர்க்க இயலாது.
தனது நிழலை தானே பிடிக்க முடியாது. அந்த நிழல் போன்றது அகங்காரம். அதை அகற்ற யாருக்கும் இயலாது. சூரியன் தலைக்கு மேலே வந்து விட்டால் நிழல் பாதத்துக்கு கீழே மறைந்து போய் விடுகிறது. ஞானம் வருகிறபோது அகங்காரம் அகன்று போகிறது.