
பணிவு எனும் சொல்லின் அடிப்படையில் வந்தது மரியாதை மதிக்க வாழ்வது மரியாதை; மாறாக வாழ்வது அவமரியாதையாகும்.
எல்லோரிடத்தும் பணிவுடன் நடந்து கொள்வதால் நன்மையே பெறலாம். நல்லவன் எனப் பெயர் எடுக்கலாம். பணிவு எனப்படும் மரியாதை எவனிடத்தில் குடிகொண்டு இருக்கிறதோ அவனிடத்தில் சிறப்பாக மற்றொரு செல்வம் உள்ளதெனக் கூறப்படுகிறது.
புகழை விலை கொடுத்தாவது வாங்கிவிடலாம். ஆனால் மரியாதை என்பது தானாக வரவேண்டும்.
நட்ட நடவு மழையிலும், புயலிலும் எப்படியேனும் இளம் பயிர் வளர்ந்திருந்தாலும் கதிர் வந்து முற்றிய பின்பு எவ்வாறு தலை வணங்கி இருக்கிறதோ அதைப்போல ஒருவன் தன் சிறுவயதில் எப்படியேனும் இருந்திருக்கலாம். பெரியவனாக வளர்ந்த பின்பு குடும்பஸ்தன் என்று பெயரெடுத்து மரியாதையாக வாழவேண்டும். அல்லது மற்றவரைப் பார்த்தாவது பழகிக்கொள்ள வேண்டும்.
எவனொருவனுக்கு இந்தச் சமூகத்தில் மரியாதை இல்லையோ அவன் மற்றவர்க்கு மரியாதை கொடுக்க மாட்டான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
எல்லோருக்கும் தெரியும் அந்த மனிதர் நல்லவர் என்று. ஆனால் அவரைப் பார்த்து அவன் மிகவும் அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவான். ஆனால் அந்த நல்லவர் அவனைப் பற்றியோ அவன் பேசிய வார்த்தையைப் பற்றியோ பெரிதுபடுத்திக் கொள்ளமாட்டார். இப்போது யார் மரியாதை உள்ளவர்?
தன்னடக்கம், தன்னம்பிக்கை, தளரா உள்ளம் - இந்த மூன்றுக்கும் முதல் படிக்கட்டாக விளங்கக் கூடியது மரியாதையாகும். மரியாதை உலகத்தில் மிகப்பெரிய சொத்து; பணிவும், தன்னடக்கமும் இதற்கு இடப்படும் வித்து.
ஒரு பழமொழி சொல்வார்கள், 'ஒருவனுக்கு சுயபுத்தி இருக்கணும் அல்லது சொல்புத்தி இருக்கணும்' என்று.
பணிவு என்ற பதத்திற்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது. நீங்கள் எடுத்துக்கொண்ட காரியம் இனிதே நிறைவேறுவதற்கு மரியாதை, பணிவு, தன்னடக்கம் - இந்த மூன்றில், தன்னம்பிக்கை, தளரா உள்ளம் ஆகிய இரண்டும் இருந்த போதும் பணிவு இல்லையென்றால் காரியம் கைகூடாது.
உங்கள் காரியத்தில் நியாயம் இருக்கலாம்; காரியம் சரியானதாக இருக்கலாம் பணிவு இல்லையென்றால் மேலிடங்களுக்குச் சென்றால் உங்களுக்கே அளிக்கப்படும் அந்த உரிமையும், அதிகாரமும், சற்றுத் தாமதமாகும். என்பது மட்டும் திட்டவட்டமான உண்மை.
சமூகத்தில் ஒருவருக்கு அவரவர் அம்சப்படியே வாழ்க்கை அமைகிறது. அதற்காக வேண்டி 'நாம் செல்வந்தனாக இருக்கிறோம். பலவானாக இருக்கிறோம் படித்தும் இருக்கிறோம் என்று எவனொருவன் மரியாதையும் பணிவு எனும் அடக்கமும் இன்றித் திரிகிறானோ அவன் நீண்ட நெடிய வாழ்க்கையெனும் சாலையிலே திசைமாறிச் சென்று திக்குத் தெரியாமல் திரும்பிப்பார்த்து நினைத்துப் பார்த்து வேதனைப்படுவான்.
எந்தச் செயலில் ஈடுபடப் போகிறோமோ அதைப்பற்றி நினைத்தல், கேட்டல், பார்த்தல், அறிதல், செய்தல் என்ற இந்த ஐந்தினையும் ஒருங்கே பெற்று பணிவுடன் செயல்பட்டால் காரியத்தில் வேற்றி பெறுவது உறுதியாகும்.
மரியாதையை ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்வதே மனித வாழ்வின் மாபெரும் பண்பாகும்.