நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் பெரிய பெரிய திட்டங்கள் இருக்கும். ஒரு புதிய வேலையில் சேருவது, சொந்தமாகத் தொழில் தொடங்குவது, வீடு கட்டுவது அல்லது திருமணம் செய்வது என ஏதோ ஒரு லட்சியம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
இந்தத் திட்டங்களை நாம் மனதிற்குள் வைத்திருக்கும் வரை அது மிகத் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை நம் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ பகிர்ந்துகொண்ட சிறிது நேரத்திலேயே, அந்த ஆர்வம் குறைந்துபோவதை நாம் உணர்ந்திருப்போம்.
ஏன் இப்படி நடக்கிறது என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா. நாம் ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் அதை ஏன் மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்பதற்கான உளவியல் காரணங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அனுமதி கேட்கும் மனம்!
நமது ஆழ்மனம் மிகவும் விசித்திரமானது. நாம் ஒரு புதிய ஐடியாவை மற்றவர்களிடம் சொல்லும்போது, அதை வெறும் தகவலாக மட்டும் பகிர்வதில்லை. நம்மை அறியாமலே நாம் அவர்களிடம் அனுமதி கேட்பது போலவே நமது ஆழ்மனம் செயல்படுகிறது. நான் இதைச் செய்யலாமா, இது சரியாக வருமா என்று மறைமுகமாக நாம் அடுத்தவரின் அங்கீகாரத்தைத் தேடுகிறோம். நாம் யாரிடம் பகிர்கிறோமோ, அவர்கள் அந்தத் துறையில் நிபுணராக இல்லாவிட்டாலும், அவர்களின் கருத்து நம் முடிவை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக மாறிவிடுகிறது.
தவறான விமர்சனங்கள்!
நாம் ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கும்முன் எப்படி Reviews பார்க்கிறோமோ, அதேபோலத்தான் நமது வாழ்க்கைத் திட்டங்களுக்கும் அடுத்தவர்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் இங்கு ஒரு சிக்கல் உள்ளது. நாம் கேட்கும் நபர்கள், அந்த விஷயத்தை ஏற்கனவே செய்து தோற்றுப்போனவர்களாகவோ அல்லது அதைச் செய்ய பயப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் நம் மீது திணிப்பார்கள். "இதெல்லாம் செட் ஆகாது", "ரிஸ்க் எடுக்காதே" என்று அவர்கள் கூறும் எதிர்மறை வார்த்தைகள், நமது நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்துவிடும். விளைவு, நாம் அந்தத் திட்டத்தையே கைவிட்டுவிடுவோம்.
Comfort Zone & பயம்!
நமது மூளை எப்போதுமே பாதுகாப்பைத்தான் விரும்பும். புதிதாக ஒன்றைச் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்கவே அது நினைக்கும். இந்நிலையில், நாம் திட்டத்தைப் பகிரும்போது யாராவது ஒரு சிறிய சந்தேகத்தை எழுப்பினாலும், நமது மூளை அதைப் பிடித்துக்கொண்டு "பார்த்தாயா, இது ஆபத்தானது" என்று நம்மை எச்சரிக்கத் தொடங்கிவிடும். நாம் ஆர்வமாக ஆரம்பித்த வேகம் அப்படியே நின்றுவிடும். நமக்குத் தெரிந்தவர்கள் நம்மைப் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு, நமது வளர்ச்சியைத் தடுக்கும் அறிவுரைகளையே பெரும்பாலும் வழங்குவார்கள்.
எப்போது பகிரவேண்டும்?
அப்படியானால் யாரிடமுமே எதையும் சொல்லக்கூடாதா என்றால் அப்படி இல்லை. செயலில் இறங்கிய பிறகு, தொழில்நுட்ப ரீதியான உதவிகளுக்கோ அல்லது வழிகாட்டுதலுக்கோ சரியான நபரிடம் கேட்பதில் தவறில்லை. ஆனால் ஒரு விஷயத்தைத் தொடங்குவதற்கு முன்பே, சும்மா ஒரு பேச்சுக்காகவோ அல்லது பாராட்டு கிடைக்கும் என்றோ பகிர்வதுதான் ஆபத்தானது. செயல் வடிவத்திற்கு வராத வெறும் கனவுகளை பகிர்வது, அந்தக் கனவு கலைவதற்கே வழிவகுக்கும்.
முதலில் செயலில் இறங்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரம் பயணித்த பிறகு, முடிவுகள் கண்ணுக்குத் தெரியும் போது தானாகவே உலகம் அதைத் தெரிந்துகொள்ளும். அதுவரைக்கும், "வாயை மூடி, வேலையைப் பார்" என்ற மந்திரமே நமது வெற்றிக்கு வழிவகுக்கும். நமது கனவுகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. அதை அடுத்தவர்களின் பயம் நிறைந்த விமர்சனங்களுக்கு இரையாக்காமல், அமைதியாக உழைத்து வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம்.