

ஆண்கள் தைரியமானவர்கள்தான். ஆனால் பெண்கள் ஆண்களைவிட தைரியசாலிகள். அவர்கள் பெரிய தியாகங்களை எளிதாக செய்கிறார்கள். பெண்களின் துணிச்சலான செயல் குழந்தைப்பேறு தான். குழந்தையை மாதக்கணக்கில் சுமந்து, பெற்று வயதுக்கு வரும் வரை பல வருடங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்வதில் உள்ள வலியை, கஷ்டங்களை முழுவதுமாக தெரிந்துகொண்டு, குழந்தையை தங்கள் வயிற்றில் புன்னகையோடு வரவேற்று சுமக்கிறார்கள்.
நான் கர்ப்பிணிப் பெண்களை பார்க்கும் போதெல்லாம், எப்போதும் அவருக்கு மனதுக்குள் வணக்கம் செலுத்துவேன். பிரசவத்திற்கு முன்பு ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் முகத்தில் தாய்மையின் பிரகாசமும், வரவிருக்கும் குழந்தைக்கான அன்பின் மென்மையும் தெரிகிறது. உண்மையில் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்து தங்கள் குழந்தையுடன் தொடர்புகொள்ளத் தொடங்குகிறார்கள்.
ஆண்களாகிய நம்மால் நம் உடலுக்குள் மாதக்கணக்கில் ஒரு சுமையை சுமப்பது என்பதை நினைத்துகூட பார்க்க முடியாது. மிகுந்த வேதனையையும், ஆபத்தையும் பொருட்படுத்தாமல், பல மாதங்களாக சொல்லொண்ணா அசௌகரியங்களுக்கு உள்ளாகி குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் பெண்களின் தைரியமும், பொறுமையும், தன்னலமற்ற தன்மையும், தியாக உணர்வும் ஆண்களிடம் நிச்சயமாக இல்லை.
அந்தக் காலத்தில் பிரசவம் என்பது தாயின் மறுபிறப்பாகக் கருதப்பட்டது. இதை ஒரு பெண் ஒருமுறை மட்டும் செய்வதில்லை. அவள் தன் வாழ்நாளில் இதைத் தானாக முன் வந்து இரண்டு முறை சில சமயங்களில் அதிகமாக செய்கிறார்.
இப்போதெல்லாம் 'தேவையற்ற' கர்ப்பத்தை தவிர்க்க குடும்பத்தின் அளவை திட்டமிடுவதற்கும் கட்டுப் படுத்துவதற்கும் வழிகள் உள்ளன. பழைய நாட்களில், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கூட, குறைந்தது அரை டஜன் குழந்தைகளையாவது இந்த உலகிற்கு கொண்டு வராத ஒரு தாய் இல்லை.
என் அம்மா ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார், கிட்டத்தட்ட எல்லா அந்த கால தாய்மார்களும் அதே எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஒரு குழந்தைக்கு இரண்டு வருடங்கள் என பதினாறு வருடங்கள் என் அம்மா தனது ஆறு குழந்தைகளை சுமப்பதிலும், கவனித்துக்கொள்வதிலும் செலவழித்ததை நினைத்துப் பார்க்கும்போது, இப்போதும் அவர் இல்லாதபோதும், எனக்கு வயதாகிவிட்டாலும் திரும்பத் திரும்ப அவரை வணங்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறிய அதிக குழந்தைகளை பெற்று ஆளாக்கிய தாய் குஞ்சு மாமி. அவர் ஒரு தாய்க்கோழி. ஆங்கிலத்தில் மதர் ஹென் என்று அழைப்பார்கள் அவர் எங்கள் பக்கத்து வீட்டாராக இருந்தார். அவர் பத்து குழந்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஏழு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள்!
அவர்கள் அனைவரும் வளர்ந்து இன்று தாத்தா மற்றும் பாட்டிகளாக இருக்கின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை பல உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது. தடுப்பூசிகள் கிடைக்காததால் குழந்தைகளிடையே பல அகால மரணங்கள் ஏற்பட்டன. திருமதி குஞ்சு தனது பத்து குழந்தைகளை வளர்க்கும் பணியை எப்படி சாதித்தார் என்பது கடவுளுக்கு தெரியும்.
தற்காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்கள் ஓய்வெடுக்க மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அந்த நாட்களில், மாமியார் தங்கள் மகளுக்கு அத்தகைய விடுமுறையை வழங்கவில்லை. அவர்கள் கருவுற்றிருக்கும் தங்கள் மருமகளிடம் இருந்து கர்ப்பத்தின் கடைசிக் கட்டம் வரை வேலை வாங்கினர். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும், அவள் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த மரியாதையுடனும், நன்றியுடனும் மற்றும் அன்புடனும் நடத்தப்பட வேண்டும்.
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், பெண்கள் சந்திக்கும் கர்ப்பகால சவால்கள், பிரசவ வலி மற்றும் அவர்கள் செய்யும் தன்னலமற்ற தாய்மையின் தியாகம் ஆழத்தை உணர்ந்து, தாய்மையையும் பெண்மையையும் சமூகத்தில் மேலும் உயரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பெறலாம்.