

தேடலில் தான் வாழ்க்கை அமைந்துள்ளது. பலர் தேடி கண்டறிந்த பாதைகளைக் கண்டறிந்து, அவ்வழியிலேயே பயணம் செய்து தங்களுடைய வாழ்க்கையின் தேடல்களில் வெற்றி காண்கிறார்கள். சிலரோ தேடிக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு, "என்ன தேடினோம்?" எனச் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
முன்னொரு காலத்தில், ஒரு நாட்டில் இருந்த ஒரு ஊரில் மழை பெய்யாமல் வறட்சி தாண்டவம் ஆடியது. அந்நேரத்தில் அந்த ஊருக்கு மகான் ஒருவர் வர, அவரிடம் சென்று மக்கள் அனைவரும், "எங்களுக்கு வாழ வழி கூறுங்கள்," எனக் கேட்டார்கள்.
போதனைகள் செய்து வந்த மகான், சில நிமிடங்கள் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து பிறகு மக்களிடம், "காட்டில் சென்று தேடுங்கள்; வாழ்க்கைக்கு வழி கிடைக்கும்," எனக் கூறியதோடு மீண்டும் மௌன விரதம் ஆகிவிட்டார்.
மகான் கூறியது மக்களுக்கு அருள்வாக்காக மாறிவிட்டது. வீட்டிற்கு வந்த அவர்கள் யோசனை செய்து, அவர்களது கிராமத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த காட்டுக்குச் சென்றார்கள். காட்டில் இருந்த விறகுகளைச் சேர்த்தும், மரங்களை வெட்டிக்கொண்டும் வந்த சிலர், அதனை விற்றுப் பணம் சம்பாதித்து வறுமையிலிருந்து மீண்டுவிட்டார்கள்.
இன்னும் சிலரோ காட்டின் தொலைவான பகுதிக்குச் சென்று, அங்கே உயரமாக வளர்ந்திருந்த தேக்கு மரங்களிலிருந்து தேக்குக் கட்டைகளை அறுத்து வந்து தொழில் செய்து, அதனை விற்று இன்னும் பணம் அதிகம் சம்பாதித்து வசதி வாய்ப்பில் உயர்ந்து நின்றார்கள்.
மகானின் அருள்வாக்கைக் கேட்ட இன்னும் சிலரோ, மகானின் கூற்றில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என எண்ணிக்கொண்டு காட்டின் உள்ளடங்கிய பகுதிக்குச் சென்றனர். அந்த காட்டுப்பாதை மிகவும் கடுமையான பயணமாகவும், அச்சுறுத்தும் பயணமாகவும் அமைந்தது. ஆனாலும் நம்பிக்கையுடன் சென்ற அவர்கள், மலையடிவாரத்தில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது நவரத்தினங்கள் கிடப்பதைக் கண்டார்கள். அவற்றை எடுத்து வந்து விற்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக மாறிவிட்டார்கள்.
இவை அனைத்தும் நமக்கு மிகப்பெரிய உண்மையை உணர்த்துகின்றன:
ஓரளவுக்கு உழைத்து விறகு வெட்டி பிழைத்தவர்கள், வாழ்க்கையின் ஆரம்ப நிலையில் இருந்து வாழ்க்கை நடத்துகின்றனர்.
காட்டின் சிறிது தூரம் சென்று தேக்கு மரக் கட்டைகளை அறுத்து வந்து வியாபாரம் செய்து சிறிது அதிகமாக உழைத்தவர்கள், கொஞ்சம் அதிக வசதியோடு வாழ்கிறார்கள்.
அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நம்பிக்கையுடன், துணிச்சலாக, சவாலாகப் பயணித்தவர்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக, வசதி வாய்ப்பிலும் மற்றவற்றிலும் முதன்மை பெற்று வாழ்கிறார்கள்.
ஆகவே, வாழ்க்கையில் தேடுதலில் தீவிரம் காட்டியவர்கள் சாதனையாளர்களாக மாறிவிட்டார்கள். "பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்" எனக் கருதக் கூடாது; தன்னுடைய முயற்சிகளில் முன்னேறிச் செல்பவர்களே வாழ்க்கையில் சாதனை படைக்கிறார்கள். ஆகவே, தேடுதலில் ஈடுபாடு(search-is-life-success) கொண்டு முயற்சி மேற்கொண்டால் வாழ்வில் முத்திரை பதிக்கலாம்.