

பிடித்த வேலையாக இருந்தாலும் நாளடைவில் அதுவும் அலுத்துப்போக வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் முதல் நாள் வேலையில் இருந்த உற்சாகத்தை கடைசிவரை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும். அதற்கான சில வழிகளை (office tips) இந்தப் பதிவில் காண்போம்.
1. நீங்கள் அதிகமாக நேரம் செலவிடும் இடம் அலுவலகம். அங்கே மற்றவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அதுவே பணியிடத்தில் கூடுதல் மகிழ்ச்சியளிக்கும்.
2. சோர்வை போக்க அமர்ந்த இடத்திலேயே சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். பிடித்த இசையை கேளுங்கள். இதனால் உங்கள் மனதில் உற்சாகம் பிறக்கும். இதனால் வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும்.
3. உணவு உங்கள் மனநிலைக்கு முக்கிய காரணம். உணவில் அளவும், ஊட்டச்சத்தும் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை தரும். ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், ஜங் புட் போன்றவற்றை பணி நேரத்தில் எடுத்துக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அளவாக உண்டு சிறப்பாக செயலாற்றுங்கள்.
4. உடலில் நீர் எப்போதும் வற்றாது பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அசதியாக உணர்வீர்கள். அவ்வபோது நீர் அருந்தி எனர்ஜியை ஏற்றுங்கள். முடிந்தால் பிரஷ் ஜூஸ் குடிப்பது நல்லது. இது உங்கள் மனநிலையை குதுகலமாக வைத்துக்கொள்ளும்.
5. எக்காரணத்தை கொண்டும் தூக்கத்தை தவிர்க்க கூடாது. இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்தநாள் சிறப்பாக பணியாற்ற முடியாது. தூக்கத்தை கட்டுப்படுத்தி வேல செய்தால் கண் எரிச்சல், தலைவலி என ஆரோக்கியம் பாழாகும். அதனால் மூளைக்கும், உடலுக்கும் நிம்மதியான தூக்கம் அவசியம்.
6. சொந்த பிரச்னைகளை பணி நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே வேலை நேரத்தில் அவற்றை மறந்து முழு ஈடுபாட்டுடன் வேலையை பார்க்க வேண்டியது முக்கியம்.
7. காலையில் வேலையை நேர்மறை எண்ணத்துடன் தொடங்குங்கள். வேலையில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக பணியாற்றுங்கள்.
8. உங்கள் மனநிலை போல தான் நீங்கள் அமரும் டெஸ்கும் இருக்கும். அதை நேர்மறை எண்ணங்களால் உங்களுக்கு பிடித்த விஷயங்களால் அலங்கரியுங்கள். அங்கே அமரும் போதெல்லாம் தனி உற்சாகம் ஏற்படும்.
9. ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்திருப்பது உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் உண்டாக்கும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஒரு நிமிடம் நடப்பது அல்லது கை, கால்களை நீட்டி 'ஸ்ட்ரெச்சிங்' செய்வது ரத்த ஓட்டத்தை சீராக்கி, மூளையை புத்துணர்ச்சியடையச் செய்யும்.
10. அலுவலகம் வந்ததும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுங்கள் (To-Do List). கடினமான வேலைகளை காலையிலேயே முடித்துவிட்டால், மாலை நேரம் பதற்றமின்றி நிம்மதியாக இருக்கும். ஒவ்வொரு வேலையை முடிக்கும்போதும் கிடைக்கும் மனநிறைவு தனி உற்சாகத்தைத் தரும்.