
நம் தினசரி வாழ்க்கையில் நாம் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களில் சில நமக்கு நன்மை தருவதாக அமையும். வேறு சில, நம் அறிவுக்கு எட்டாமலே, நம் சந்தோஷத்தை சீர் குலைப்பதாக அமைந்துவிடும். அவ்வாறு எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக்கூடிய பழக்கங்கள் எவை எனக் கண்டுபிடித்து, அவற்றைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்வோமானால் நமக்குள் சந்தோஷம் நீடித்து நிலைக்கும். அவ்வாறு தவிர்க்க வேண்டிய ஆறு வகைப் பழக்கங்களின் பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம்.
1. அதிகளவு வேலைப்பளு: தற்போதைய பரபரப்பான சூழலில் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து அனைவரும் கடினமாக உழைக்கிறோம். இந்த நிலை தொடரும்போது அதுவே ஒரு துன்பம் தரும் செயலாக மாறி, ஓய்வு, படைப்பாற்றல், பிறருடன் சிறிது நேரம் செலவிடுதல் போற்றவற்றிற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். அதனால் ஸ்ட்ரெஸ் அதிகமாகி சந்தோஷம் நம்மை விட்டு விலகிவிடும்.
2. சுய நலமின்றி இருத்தல் (Neglecting self-care): தனக்காக சிறிது நேரம் கூட ஒதுக்காமல், எப்பொழுதும் வேலை, குடும்பம் என்ற நினைப்பிலேயே நாட்களைக் கழிக்கும்போது ஒரு கட்டத்தில் எரிச்சலும், ஸ்ட்ரெஸ்ஸும் நம்மை அழுத்தி வாழ்க்கையே ஒரு நரகம் போன்ற உணர்வைக் கொடுக்க ஆரம்பிக்கும்.
எனவே, அவ்வப்போது நமக்காக சிறிது நேரம் எடுத்துக் கொண்டு சிறிதளவு நடைப்பயிற்சி, மெடிட்டேஷன், மனதுக்குப் பிடித்த விதத்தில் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போட்டு சுத்தமான ஆடை அணிவது போன்றவற்றை செய்யும்போது சந்தோஷம் தானாகவே மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளும்.
3. மற்றொருவருடன் உங்களை ஒப்பிடுதல்: மீடியாக்களில் வரும் மற்றவர்களின் போட்டோவுடன் கூடிய பதிவுகளைப் பார்த்து, நாம் அவர்களைப் போல் இல்லையே என ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குள் திருப்தியின்மையையே உண்டுபண்ணும். போட்டோவில் காண்பது அனைத்துமே உண்மைத் தன்மையை வெளிப்படுத்துபவை என எண்ணுவது தவறு. நம் வாழ்கை வேறு அவர்கள் வாழ்க்கை வேறு என்பதை நன்கு புரிந்துகொண்டு நமது இலக்கை நோக்கிப் பயணிப்பது ஒன்றே நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்.
4. எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல்: வாழ்க்கையில் ஒரு சிறிய சறுக்கல் அல்லது பிறர் நம்மைப்பற்றி கூறும் தவறான விமர்சனங்கள் போன்றவற்றை சந்திக்கும் போது, நமக்குக் கிடைத்த பல நல்ல விஷயங்களை எல்லாம் மறந்து எதிர்மறை எண்ணங்களை மட்டும் மனதில் நிறுத்தி கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இது வாழ்க்கை மீது அவநம்பிக்கையை உண்டுபண்ணி நிம்மதியை இழக்கச் செய்யும். எனவே நேர்மறை எண்ணங்களை மனதிற்குள் வளர்த்துக் கொண்டு நமக்குக் கிடைத்த நல்லவற்றிற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த நினைப்பது நம் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்.
5. எதிர் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது
(Living in the future): எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடுதலும் கனவு காண்பதும் இயற்கை. ஆனால் அதுவே அதீதமான எதிர்பார்ப்புகளோடு கவலைகளாக மாறும்போது நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போகும். நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்ன நடக்குமோ என வருந்தி ஸ்ட்ரெஸ்ஸை வரவழைத்துக் கொள்ளாமல் இன்றைய சந்தோஷத்தை அனுபவிக்க கற்றுக்கொள்ளுதல் நன்மை பயக்கும்.
6. நமக்கு ஆர்வமுடைய விஷயங்களை செய்யா திருத்தல் (Neglecting our passions): நமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்தி, நமக்குப் பிடித்த சில விஷயங்களை செய்யாமல் தவிர்த்து விடுகிறோம். காலப்போக்கில் இது நம் வாழ்வில் வெறுமையையும் திருப்தியின்மையையும் உருவாக்கி நிம்மதி இழக்கச் செய்துவிடும். பிடித்தமான புத்தகத்தைப் படிக்கவோ, நடனப் பயிற்சி பெறவோ, இசைக் கருவியை மீட்டவோ நேரம் ஒதுக்குவோம். மகிழ்ச்சியை மீட்டெடுப்போம்.
வாழ்க்கை என்பது கம்பி மீது நடப்பது போன்றது. பொறுப்புகள், உறவுகள் என ஒரே திசையில் பயணித்துக் கொண்டிராமல் உள்மனது ஆசைகளையும் நிறைவேற்ற கற்றுக்கொண்டு பயணத்தை சம நிலைப்படுத்தும்போது வாழ்க்கை இனிக்கும்.