

அன்றைக்கு அந்த கோவிலில் பெரிதாக கூட்டம் இல்லை; ஒரு பத்து பேர் மட்டுமே நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே தோன்றிய கடவுள், "உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? கேளுங்கள், நான் தருகிறேன்," என்று சொன்னாராம்.
முதல் மனிதன் வந்து, "எனக்கு அளவிட முடியாத காசும், ஒரு பிசினஸும் வேண்டும்," என்று கேட்டான்.
இரண்டாவது மனிதன் வந்து, "இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பதவி எனக்கு வேண்டும்," என்று கேட்டார்.
மூன்றாவது மனிதர் வந்து, "இந்த உலகத்திலேயே நான் தான் புகழ்பெற்ற மனிதனாக இருக்க வேண்டும்," என்று கூறினான்.
கடவுளும் அவர்கள் கேட்ட வரத்தை உடனேயே கொடுத்துவிட்டாராம். இப்போது பத்தாவது மனிதன் கடவுள் முன்பு வந்து நின்று, "இந்த உலகத்தில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு உச்சக்கட்ட மனநிம்மதியுடனும், மனநிறைவுடனும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்," என்று கேட்டான்.
இதைக்கேட்ட மற்ற ஒன்பது பேரும் சட்டென்று அவரைத் திரும்பிப் பார்த்து, கைக்கொட்டிச் சிரித்தார்கள். "மனஅமைதி, மனநிறைவா? நாங்களும் அதற்காகத்தானே இதையெல்லாம் கேட்டோம். நாம் ஆசைப்படுவது கிடைத்தால் மனநிம்மதி தானாகவே வந்துவிடுமே!" என்று கூறி கேலி செய்தார்கள்.
"நீங்கள் கேட்டதையெல்லாம் நான் கொடுத்துவிட்டேன் அல்லவா? நீங்கள் அனைவரும் இங்கிருந்து போகலாம்," என்று கடவுள் கூறினார்.
இப்போது அந்த பத்தாவது நபரைப் பார்த்து கடவுள், "நீ இங்கேயே இரு. நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். சற்று காத்திரு, நான் இதோ வந்துவிடுகிறேன்," என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
இப்போது அந்த ஒன்பது பேருக்கும் மனசு கிடந்து அடித்துக்கொண்டது. "இப்போது அந்த பத்தாவது மனிதனுக்கு கடவுள் என்ன தரப் போகிறார்?" என்று நினைத்துப் பொறாமைப்பட்டனர். தான் ஆசைப்பட்டு கேட்ட எல்லாம் அவர்கள் கைகளில் இருந்தும், எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது நபரைப் பார்த்து பொறாமைப்பட்டனர்.
அப்போதே, அந்த இடத்திலேயே அவர்களுக்கு நிம்மதி போனது; கிடைக்கும் என்று நினைத்த மனநிறைவும் போனது. ஆனால், இந்த பத்தாவது மனிதனோ எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை என்றாலும், கடவுளின் பதிலுக்காகப் பதற்றமின்றி காத்துக் கொண்டிருந்தான். கடவுளே தன்னிடம் பேசப் போகிறார் என்ற எண்ணமே அவனுக்கு முழு மனநிறைவைக் கொடுத்தது.
நீதி: நம் எண்ணங்கள்தான் நம் சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றன. "இது கிடைத்தால் மகிழ்ச்சி" என்று நீங்கள் நினைக்கும் விஷயம் நடந்ததாகவே எண்ணிப்பாருங்களேன். உங்கள் மனது, "நான் நினைத்தது கிடைத்துவிட்டது, இனி எதற்கும் ஆசைப்பட வேண்டாம்" என்றா நினைக்கும்? இல்லை, அடுத்த ஆசைக்குத்தான் அது தாவும். நாம் அனைவரும் 'பத்தாவது மனிதராக' இருக்கப் போகிறோமா அல்லது 'பத்தாது' என்று சொல்லும் மனிதராக இருக்கப் போகிறோமா (solution for desire) என்பது நம் கையில்தான் இருக்கிறது.