

ஆறு நிறைய வெள்ளம் போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும்...
இந்த வசனத்தை நாம் எல்லோருமே கேட்டிருப்போம் ஏன் நேரடியாக பார்த்தே இருப்போமே. நாய்கள் ஆறாக இருந்தாலும் சரி, குளமாக இருந்தாலும் சரி, ஏரியாக இருந்தாலும் சரி, இல்லை ஒரு பாத்திரத்திலே நம் வீட்டில் தண்ணீர் வைத்தாலும் சரி, அது தன்னுடைய நாக்கால் தான் தண்ணீரை நக்கி குடிக்கும்.
அது ஏன் அவ்வாறு குடிக்கிறது? ஏனென்றால் அதனால் நம்மை போன்று கைகளால் எடுத்தோ அல்லது ஒரு பாத்திரத்தில் நிரப்பியோ அப்படியே வாயில் ஊற்றிக் கொள்ள முடியாது. நாக்கால் நக்கி குடிப்பது போல் தான் படைத்திருக்கிறார் இறைவன். அதுவும் 'இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... நாம் நாக்கினால் நக்கி தான் குடிக்க வேண்டுமா?' என்று எப்போதும் யோசித்ததில்லை. அது எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் யோசிக்கவுமில்லாமல் தனக்கு தேவையான தண்ணீரை நாக்கால் அருந்திவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விடுகிறது.
பல பேர் இந்த பழமொழியை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதங்களில் அதற்கான அர்த்தத்தை கூறுகிறார்கள்.
சில பேர், ஒரு சிலரை இத்தனை பணம் இருந்தும் செலவு செய்யாமல் கஞ்சனாக இருக்கிறான். ஆறு நிறைய வெள்ளம் போனாலும் அவன் நக்கி தான் குடிப்பான் என்று அவர்களை ஏளனம் செய்வார்கள்.
இன்னும் சிலர், ஆறு நிறைய வெள்ளம் இருந்தால் என்ன? இத்தனை சொத்து இருந்தும் என்ன பயன்? என்னால் பணத்தை எடுத்து செலவழிக்க முடியுமா? அல்லது அனுபவிக்கத்தான் முடியுமா? எனக்கு அந்த ஆளுரிமை இல்லையே. ஆறு நிறைய வெள்ளம் போனாலும் என்னுடைய தலையெழுத்து. நான் நக்கி தான் குடிக்க வேண்டும் என்று தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டும் புலம்புவார்கள்.
ஆனால் நீங்கள் நாயின் இந்த செய்கையை பற்றி நன்றாக யோசித்தீர்களேயானால் உங்களுக்கு உண்மை புரியும்.
அதாவது அந்த நாயானது எவ்வளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் தனக்குத் தேவையானதை மட்டும் அருந்தி விட்டு செல்கிறது. 'ஐயோ, இத்தனை தண்ணீர் இருக்கிறதே. நம்மால் எடுத்து கொள்ள முடியவில்லையே' என்று அது புலம்புவதில்லை. தன்னுடைய தாகம் தீர்ந்தவுடன் சென்று விடுகிறது. கடவுள் அதற்கென கொடுத்த அந்த இயற்கையான அமைப்பை அதை ஏற்றுக் கொண்டு அதனோடு ஒன்றி நடக்கிறது.
இதைப் போலவே தான் நாமும் நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் எத்தனையோ நல்லது கெட்டது என நிரம்பி வழிகிறது. நல்லவர்களும் கெட்டவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். பணக்காரர்களும் ஏழைகளும் கலந்து இருக்கிறார்கள். மீடியாவிலும் இணையதளத்திலும் நல்லதும் கெட்டதும் நிரம்பி வழிகின்றன.
நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நமக்குத் தேவையான நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை பார்க்காமல் மேலும் அதை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் வாழ வேண்டும். கடவுள் நம்மை எப்படி படைத்தாரோ அதே முறையில் இயற்கையோடு இணைந்து நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லெண்ணத்தோடு வாழ வேண்டும்.