

நாம் சொல்லும் எந்த விஷயத்திற்கும் பொருத்தமான வார்த்தைகளும், பொருத்தமான சூழல்களும் தேவைப்படுகின்றன.
சரியான வார்த்தைகளைக் கோர்த்து சொல்லப்படும் ஒரு பாராட்டு எவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும்.
ஒருவர் ஏதாவது சாதனை செய்தால்தான் பாராட்ட வேண்டும் என்பது இல்லை.
மழலை சிரிப்பால் நம்மைத் துக்கம் மறந்து மகிழச் செய்யும் குழந்தை...
கடமையே என உணவு பரிமாறாமல் அக்கறையுடன் வேண்டியதைக் கேட்டு கேட்டு கொடுக்கும் உணவக ஊழியர்...
பின்னால் ஓடிவரும் நம்மைப் பார்த்ததும் கிளம்பிவிட்ட பஸ்ஸை நிறுத்தி நம்மை ஏற்றிக்கொள்ளும் டிரைவர்...
இப்படி எல்லாரும் பாராட்டு பெறுவதற்கு தகுதியானவர்களே!
எல்லோரையும் பாராட்டுங்கள்; அதன் மூலம் அவர்களின் அன்புக்குரியவர்களாக நாம் மாறலாம்.
பொருத்தமான இடத்தில் சொல்ல வேண்டிய சில பாராட்டு வாசகங்களை இங்கே பார்ப்போம்!
அலுவலகத்தில்: இந்த வேலையை உங்களை விட வேற யாராலும் இவ்வளவு கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் செய்துவிட முடியாது!
தொழில் செய்பவரிடம்: இந்தத் தொழிலில் உங்களைப் போல அக்கறையான மனிதர்களை பார்ப்பது அருமையான விஷயம்
வீட்டு வேலை செய்யும் பெண்மணியிடம்: நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் வேலையை நேசிக்கிறீர்கள் என்பதை உங்களின் செயல்பாடு நிரூபிக்கிறது
வேலையாளிடம்: நீங்கள் வெறுமனே சம்பளத்துக்காக மட்டும் வேலை செய்யவில்லை. அதை தாண்டிய ஈடுபாட்டை காட்டுறீர்கள்.
உதவி செய்தவர்களிடம்: இந்த நேரத்தில் நீங்கள் இந்த உதவியை எனக்கு செய்திருப்பதை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன்; நீங்கள் செய்த இந்த உதவி எவ்வளவு மதிப்பானது.
பக்கத்து வீட்டாரிடம்: எப்போதும் இதே போல கனிவுடன் இருங்கள்; அற்புதமான ஒரு செயலைச் செய்திருக்கிறீர்கள்; இதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பாராட்டைச் சொல்ல முடியாது.
அலுவலக சக ஊழியரிடம்: இந்தப் பணியை எப்படி செய்ய வேண்டும் என அடுத்தவர்களுக்கு உதாரணம் காட்டும் ரோல் மாடலாக நீங்கள் இருக்கிறீர்கள். சுயநலம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களே சூப்பர் ஹீரோக்கள். நீங்களும் ஒரு ஹீரோ தான்.
சமூக சேவை செய்பவர்களிடம்: உங்களை சந்திக்க முடிந்தது எனக்கு கிடைத்த பெரும் பேறு. உங்களின் சேவை போற்றுதலுக்குரியது.
நாம் சொல்லும் ஒரே வார்த்தை அதைச் சொல்லும் விதத்தில் அர்த்தங்கள் வேறாக மாறிவிடும். அதனால் சொல்லும் விதத்தில் வார்த்தைகளை சொல்லுங்கள்!