

நாம் அனைவருமே வாழ்வில் ஒரு குறிக்கோளுடன்தான் பயணம் செய்கிறோம். நம்முடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்கும். ஆனால், சில சமயம் நம் குறிக்கோளிலிருந்து (distraction) விலகிப் போகலாம். அவ்வாறு போகும்போது இந்தக் கதையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு ஊரில் ஒரு வாலிபன் இருந்தான். அவனுக்குப் பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால், புதையலுக்கான வரைபடத்தைப் பல இடங்களில் தேடி அலைந்தான். அப்படி அலைந்து தேடியதில் அவனுக்கு ஒரு வரைபடம் கிடைத்தது. அந்த வரைபடத்தில் இருந்த புதையல், ஒரு மலை உச்சியில் இருந்தது.
இவனும் அந்த மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டே இருக்கிறான். சோர்வாக இருக்கிறது, கஷ்டமாக இருக்கிறது; இருந்தாலும் மலை உச்சியை அடைய வேண்டும் என்று விடாமல் ஏறுகிறான். புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏறுகிறான். அப்படி ஏறுபவன் கண்களில் திடீரென்று ஒரு பாறை படுகிறது. அந்தப் பாறையில் விதவிதமான, ரகரகமான, ஜொலிக்கும் கற்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இதைப் பார்த்த வாலிபனின் மனம் மாறுகிறது. "மேலே போகிறோம், அங்கே புதையல் கிடைக்குமோ கிடைக்காதோ... எனவே, முதலில் இந்தக் கற்களை எடுப்போம்" என்று ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்குகிறான். இது போலவே சில பாறைகளில் இருந்த கற்களை எடுத்து மூட்டையில் சேர்த்து வைத்துக்கொள்கிறான்.
மூட்டை முழுவதும் அந்த கற்களை நிரப்பிய பிறகு, "இதையே எடுத்துச் சென்று விற்று பணக்காரன் ஆகிவிடலாமே, எதற்கு மேலே செல்ல வேண்டும்?" என்று முடிவு செய்து, மூட்டையை எடுத்துக்கொண்டு மலையை விட்டு இறங்குகிறான். அவனுடைய ஊரைச் சேர்ந்த வைர, வைடூரிய வியாபாரிகளைப் போய் சந்தித்து அந்தக் கற்களைக் கொடுக்கிறான். அதைப் பரிசோதித்துப் பார்த்த வியாபாரி, "தம்பி, இந்தக் கற்களுக்குத் தங்கக் காசு இல்லை, ஒரு வெள்ளிக்காசு கூடத் தர முடியாது. ஏனெனில், இவை கண்ணாடி கற்கள்" என்று கூறி அவன் கையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுகிறார்.
"மலை உச்சியில் புதையல் இருப்பதாக வரைபடத்தில் இருந்தது. அதைப் பின்பற்றிப் போகாமல், இடையில் கிடைத்த கண்ணாடி கற்கள் மீது ஆசைப்பட்டு இப்படி ஏமாந்துவிட்டோமே!" என்று இப்போது அந்த இளைஞனுக்குத் தோன்றியது!
குறிக்கோளை நோக்கிச் செல்லும் வழியில் வரும் சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பார்த்து, தன் லட்சியத்திலிருந்து விலகுவோருக்கு இந்த இளைஞனின் கதை ஒரு பாடம். உங்களுடைய குறிக்கோள் புதையலின் மேல் இருக்க வேண்டுமே தவிர, ஜொலிக்கும் ஒரே காரணத்திற்காகக் கண்ட கற்களின் மீது இருக்கக் கூடாது.