

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசுநாதரே கூறியிருக்கிறார்.
சிலருக்கு யாராவது கேள்வி கேட்டால் எரிச்சலாக இருக்கும்; பதில் சொல்லப் பிடிக்காது.
ஆனால், கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக இரவு பகலாகப் பாடுபட்டு ஆராய்ச்சி செய்தார் வில்லியம் முர்டோக் (William Murdoch).
"நீராவி இயந்திரத்தில் (Steam engine invention) எந்தவொரு சந்தேகம் என்றாலும் முர்டோக்கைக் கேளுங்கள்" என்ற அளவிற்கு அவர் நீராவி இயந்திரங்களைப் பற்றி அறிந்து வைத்திருந்தார். 'போல்ட்டன் அண்ட் வாட்' நிறுவனத்தில் நீராவி இயந்திரங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முர்டோக்கிடம், என்ன சந்தேகம் கேட்டாலும் தீர்த்து வைத்துவிடுவார்.
சக்கரங்களை நீராவியைக் கொண்டு சுழல வைக்கலாம் என்பது அடிப்படை கண்டுபிடிப்பு. மதுபான உற்பத்தி ஆலை ஒன்று நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்த முன்வந்த நிலையில், அதைப் பொருத்தும் பொறுப்பில் முர்டோக் அமர்த்தப்பட்டிருந்தார்.
அந்த ஆலையின் அதிபர் முர்டோக்கிடம், "எங்கள் ஆலையை இயக்குவதற்கு இதுவரை குதிரைகளைப் பூட்டி ஓட்டினோம். ஆனால், இனிமேல் நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்தினால், இது எத்தனை குதிரைகளின் வேலைகளைச் செய்யும் என்று கணக்கு போட்டுச் சொல்ல முடியுமா?" எனக் கேட்டார்.
நமக்குள்ளே தோன்றும் ஒரு தேடலைக் கண்டுபிடிக்க இறங்குவது ஒருவகை ஆராய்ச்சி என்றால், மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்ற வேகத்தில் ஆராய முற்படுவது மற்றொரு வகை. இந்த இரண்டிலுமே சிறந்தவராக இருந்தார் முர்டோக்.
மதுபான ஆலை உரிமையாளர் கேட்ட கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க முர்டோக் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார். குதிரையின் உழைப்புடன் இயந்திரத்தின் திறனை ஒப்பிட்டுப் பார்க்க, பொருத்தமான அலகு (Unit) ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அவ்வாறு முர்டோக் கண்டுபிடித்த அளவீடுதான் 'குதிரைத் திறன்' (Horsepower). எந்த விசையால் இயந்திரம் இயக்கப்பட்டாலும், "இது இத்தனை குதிரைகளைப் பூட்டி ஓட்டுவதற்குச் சமம்" எனப் பாமரர் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வழிவகுத்தவர் முர்டோக்.
மதுபான அதிபர் முர்டோக்கிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதால்தான், இன்றைக்கு 'ஹார்ஸ்பவர்' என்ற அலகு நமக்குக் கிடைத்திருக்கிறது.
ஆகவே, கேள்வி கேட்பதும் அதற்கான பதிலைக் கண்டுபிடிப்பதும் புதிய முயற்சிக்கான வழிகாட்டுதல் ஆகும். எனவே, கேள்வி கேட்பதையும் அதற்கான பதிலைப் பெறுவதையும் தயங்காமல் தொடர்ந்து செய்யுங்கள்.