
பிறர் பார்க்கும்போது நல்லவர்களாகவும் தனிமையில் வேறு மாதிரியும் நடந்து கொள்ளும் மனிதர்கள் ஏராளம். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக தவறு செய்யும் மனிதர்களை இருண்ட உளவியல் தந்திரங்கள் (டார்க் சைக்காலஜி டெக்னிக்குகள்) மூலம் சரி செய்வது எப்படி என்று ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உளவியல் பேராசிரியரான பிலிப் ஜிம்பார்டோ தனது ‘தி லூசிஃபர் எஃபெக்ட்’ (The Lucifer Effect) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
இந்தப் புத்தகம் அடிப்படையில் நல்லவர்களாக இருப்பவர்கள் கூட சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வெளிப்புறத் தாக்கங்களினால் எவ்வாறு தீயவர்களாக மாறுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அவர்களை மீண்டும் நல்லவர்களாக மாற்ற உதவும் 5 இருண்ட உளவியல் தந்திரங்களைப் பற்றி இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
5 இருண்ட உளவியல் தந்திரங்கள்:
1. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட மாதிரி சிறைச்சாலைகளில் மாணவர்கள் கைதிகளாகவும், சிறைக் காவலர்களாகவும் வேடமற்று நடித்தனர். கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மிகவும் கொடூரமாகவும், கைதிகளை துன்புறுத்துபவர்களாகவும் காவலர்கள் விரைவில் மாறினர். நல்லவர்களின் நடத்தை கூட அதிகாரம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளால் மாறும் என்பதை இந்த பரிசோதனை விளக்குகிறது.
2. சிறைக் காவலர்களாக யூனிபார்ம் அணிந்து நடிக்கும் போது, 65% மாணவர்கள் எதிர்பாராத அளவில் மிகவும் முரட்டுத்தனமாகவும், மோசமாகவும் நடந்து கொண்டனர் என்பதை அந்த பரிசோதனை விளக்கியது. இதனால் உண்மையாகவே ராணுவத்திலும் காவல்துறையிலும் பணி புரியும் நபர்கள் தங்கள் வகிக்கும் பதவிகளுக்கு ஏற்பவும், இயல்பான வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உத்தரவுகளை பின்பற்ற நேரும் போதும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உணர வைத்தது.
3. கடுமையான குளிர், பனி போன்ற அசாதாரணமான வானிலை மக்களின் மனதை பாதித்து செய்யக்கூடாத கடுஞ்செயல்களை கூட செய்ய வைக்கும். சமூக சூழல் சார்ந்த மாற்றங்கள் அவர்களை மன அழுத்தத்திலும் நெருக்கடியிலும் தள்ளும் போது அவர்களது நடத்தையிலும் உணர்ச்சியிலும் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
4. 1964 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஒரு வழக்கில், 38 சாட்சிகள் தங்களது கடமையை சரியாக செய்யவில்லை. ஒவ்வொருவரும் பிறர் சரியாக சாட்சி சொல்வார்கள் என்று அலட்சியமாக இருந்து விட்டார்கள். இது பை ஸ்டேண்டர்ட் எஃபெக்ட் என்று கூறப்படுகிறது. சாலையில் நடக்கும் விபத்துகளை சில பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் போவார்கள். வேறு யாராவது வந்து ஆம்புலன்சிற்கு தகவல் தருவார்கள், அடிபட்டவர்களுக்கு உதவுவார்கள் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் போகிறார்கள் என்று உணர்த்துகிறது.
5. பிறரை தன்னைப் போல சகமனிதனாக மதிக்காமல் போகும் போது அவர்களுக்கு எந்த விதமான கெடுதல்களையும் செய்யலாம் என்ற கொடூர மனப்பான்மை உருவாகிறது. அதனால் தான் சிறிதும் இரக்கமின்றி சிலர் நடந்துகொள்கின்றனர்.
ஒரு மனிதன் தீயவனாக நடந்து கொள்வது அவனுடைய சுற்றுப்புற சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் போன்றவற்றின் காரணமாக தானே தவிர அவனது இயல்பான குணத்தினால் அல்ல என்கிறார் ஜிம்பார்டோ. ஒருவருக்கு தவறான சூழ்நிலையும் அழுத்தங்களும் தரப்பட்டால், நல்ல மனிதன் கூட தீயவனாக நடந்து கொள்ள முடியும்.
நல்ல மற்றும் கெட்ட நடத்தைக்கு இடையில் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. சுற்றுப்புறம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அது மாறக்கூடும் என்கிறார் ஜிம்பார்டோ. தங்களிடம் உள்ள எதிர்மறை குணங்களை மாற்றிக் கொள்ளவும், சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாறவும் ஏற்றவாறு தங்களது நடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். கடினமான சூழ்நிலைகளில் கூட தீமைக்கு எதிராக செயல்படும் தலைமைக்குணம் மிக்கவர்களாக மக்கள் மாற வேண்டும் என ஜிம்பார்டோ வலியுறுத்துகிறார்.