
போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழமுடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை.
பூந்தோட்டத்தில் தினம் தினம் புதுப்புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பது இல்லை, அது நியதியும் இல்லை.
அது போலத்தான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும், போவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஓரு பூ நிலைப்பது இல்லையோ அதேபோல் வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் கலந்தது.
சரியான நேர்மையான வாழ்க்கைப் பயணப்பாதை முட்கள் நிறைந்த கரடு முரடான பாதைதான். இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப்பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமில்லாத விமர்சனங்களும் நிறைந்துதான் இருக்கும். வாழ்க்கையில் போராட்டங்கள் இடைவிடாது தொடரும்போது மனம் தளர்வது இயல்பானதுதான். வாழ்க்கையே வெறுத்து விடும். உறவுகள் கூட கசக்கும்.
எதற்காக இவ்வளவு துன்பங்களுடன் வாழவேண்டும் என்று கூட மனம் கேள்வி எழுப்பும். எல்லோரும் நம்மைக் கைவிட்டதுபோல் தோன்றும். இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான்.
வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக்கொள்ள ஓவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டி உள்ளது. போராட்டமே இல்லாத வாழ்க்கை இவ்வுலகில் இல்லை என்பதை நாம் முதலில் அறியவேண்டும்.
வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் மனத்தெளிவு உதவும். துன்பங்கள் வாழ்க்கையில் வரலாம்; ஆனால் துன்பமே வாழ்க்கை என்றால்?
துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு அவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது. இந்த மாதிரியான கடினமான சமயங்களில், நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். மனதை சோர்ந்து போக விடக்கூடாது.
எது நடந்தாலும் பரவாயில்லை என்ற மனஉறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.. நமக்கு இருக்கிற பிரச்னை என்னவென்றால் மற்றவர்கள் முன் நம் கவுரவம் குறைந்துவிடுமோ என்ற பயம், அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம்.. இவற்றை விட்டு ஒழியுங்கள்.வாழ்க்கை எளிதாகிவிடும்.
உங்கள் வாழ்க்கைப் பாதையை நல்ல சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள் வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும்.
கப்பல் வடிவு அமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல! கடலில் புயலும் வீசும். தென்றலும் அடிக்கும். இரண்டையும் கடந்து வாழ்க்கைப் பாதையில் வாழ வாருங்கள்..! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம்.