

வாழ்நாளில் உங்களுடைய பங்கு என்ன? பிறர் என்ன நினைப்பார்கள்? அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? என்று உங்களுக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு ஒரு முடிவை எடுக்கிறீர்களா? இதுதான் உங்களுக்கு மனத்திருப்தியைத் தருகிறதா? அப்போ வாழும் காலத்தில் உங்களுடைய பங்கு என்ன?
மனிதர்களாகிய நமக்குச் சமூகத் தன்மை அதிகமுண்டு. அதனால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த அக்கறையாக இருப்போம். குழந்தைப் பருவத்திலிருந்ததோ, பெற்றோரிடமிருந்தோ, ஆசிரியர்களிடமிருந்தோ அல்லது சக நண்பர்களிடமிருந்தோ இந்த அங்கீகாரத்தைப் (seek approval) பெற நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம்.
இதன் தாக்கம் எப்படி இருக்கும்?: இந்த மனப்பான்மை ஒருவருக்கு ஒழுக்கத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கக்கூடும் என்றாலும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? அல்லது என்ன நினைப்பார்கள்? என்று தொடர்ந்து நினைத்துக்கொண்டு ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்வது ஒரு அமைதியான சிறை (silent prison) போன்று மாறிவிடும்.
இது ஒருவரின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்துகிறது; படைப்பாற்றலைத் தடுக்கிறது... படிப்படியாக பதட்டத்திற்கும் வழிவகுக்கிறது. இப்படி ஒவ்வொரு முடிவும் மற்றவர்களின் கண்ணோட்டத்தின்படி முடிவு செய்யும்போது; ஒரு நபர் தனது உண்மையான குணாதிசயத்தை (authentic self) மறந்துவிட்டு விலகிச் செல்ல நேரிடும்.
இத்தகைய மனப்பான்மை (mindset) ஒருவரின் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடக்கூடும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் நபர்கள்; வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்க தயங்கலாம். பிடிக்காத தொழிலைச் செய்ய வேண்டிய இன்னல்களுக்கு ஆளாகலாம் அல்லது தனிப்பட்ட ஆர்வங்களை அடக்கிக்கொள்ளலாம் (suppress personal passions). காலப்போக்கில் இது வருத்தத்திற்கும், நிறைவேறாத ஆசை குறித்த உணர்விற்கும் வழிவகுக்கும்.
நம்மைச் சுற்றி சமூகத் தரநிலைகள்(societal standards) எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன; இன்று பாராட்டப்படுவது நாளை விமர்சிக்கப்படலாம். இப்படி சமூகமே ஒரு நிலையற்ற முறையில் இயங்கும்போது, ஒருவரின் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களின் எதிர்பார்ப்பே (expectations of others) அதிகம் காணப்பட்டால்; அது சம்பந்தப்பட்ட நபரை நிலையற்ற தன்மைக்கும் (instability), அதிருப்திக்கும் ஆளாக்குகிறது.
யாரையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன பலன்?: மறுபுறம் மற்றவர்களின் பேச்சைப் பற்றி தேவையற்ற கவலைகொள்ளாமல், ஒருவரின் சொந்த எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்வது பெரும் நன்மைகளை வழங்குகிறது. இது தன்னம்பிக்கை, மீள்தன்மை (resilience), மன அமைதியை வளர்க்கிறது. படிப்படியாக தங்களுடைய உண்மையான சுபாவத்தை ஏற்றுக்கொள்பவர்கள் (who embrace authenticity) பெரும்பாலும் சிறந்த படைப்பாற்றல், வலுவான முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் அவர்களுக்குள் உள்ள ஆழமான நோக்க உணர்வைக் (sense of purpose) கண்டறிகிறார்கள்.
அவர்கள் புதுமைகளைப் புகுத்தவும், சவால்களை எதிர்கொள்ள தயாராகவும், மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். முக்கியமாக இத்தகைய சுதந்திரமான வாழ்க்கை எந்நிலையிலும் பிறரின் மரியாதை கெடுவதையோ, பிரச்னை வழிவகுக்கவோ செய்யாது. மாறாக இது அனைவரிடத்திலும் ஒரு சமூக விழிப்புணர்வையும், ஒவ்வொருவரும் தனிமனித கண்ணியத்துடன் வாழும் ஒரு சமநிலையான சமுதாயத்தையும் உருவாக்கும்.
இறுதியில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம்: பிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதல்ல; மாறாக ஒருவர் தம்மை எவ்வளவு உண்மையாக உணர்கிறார் என்பதில்தான் இருக்கிறது.