இருள் விலகும்; வெளிச்சம் வந்தே தீரும்! அனால், அதற்கு 'இது' நிறையவே வேண்டும்!

Success
Success
Published on

- ராதாரமேஷ்

வெற்றியை அடைய நினைக்கும் ஒரு மனிதனுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று பொறுமை. நாம் எத்தனையோ விஷயங்களை செய்திருப்போம். பல நாட்கள் முயற்சி செய்து அதனை செய்யும் போது சில நேரங்களில் நமக்கு உடனுக்குடன் ரிசல்ட் கிடைக்காமல் இருக்கலாம்.

அதனால் மனம் எப்போதும் குழம்பிய நிலையிலேயே இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் மனம் அந்த இடத்திலேயே வந்து நிற்கும். இது போன்ற மனநிலையை நம்மில் கடந்து வராதவர் எவருமே இல்லை.

நம் மனதை பலவீனப்படுத்தக் கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். இந்த உலகில் உள்ள அனைத்துமே உழைப்பின் பயனால் விளைந்தது. உங்கள் உழைப்பின் பயன் உங்களிடம் நிச்சயம் வந்து சேரும்; அது ஒரு நாளும் வீண் போகாது.

'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்று கூறியதன் அர்த்தமே இதுதான். பலனை எதிர்பாராதே என்பதன் அர்த்தம் 'பலனை எதிர்பார்க்காதே' என்பது அல்ல, பலனை எதிர்பார்த்து காலங்களை கடத்தாதே என்பதே.

உனக்கான அடுத்த கட்ட வேலையை நீ செய்யும் போது நீ உழைத்த உழைப்புக்கான பலன் நிச்சயம் ஒரு நாள் உன்னை தேடி வரும். அதற்காக நீ அதையே ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை நாம் உணவு உண்டால் கிட்டத்தட்ட நான்கிலிருந்து 5 மணி நேரத்திற்கு பசிப்பதில்லை அல்லவா? அதை போல் தான் நாம் நம்முடைய உழைப்பை ஓரிடத்தில் போடும்போது அதன் பலனும் வந்து சேர சில காலங்கள் ஆகலாம். அது வரை பொறுமை மிகவும் அவசியம்.

பொறுமை இல்லாதது நமக்குள் பல நேரங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும், எந்த ஒரு செயலையும் கருத்து ஊன்றி செய்ய இயலாது, எந்த ஒரு செயலிலும் மனம் பொருந்தாமல் ஏனோ தானோவென்று இருக்கும். எனவே இதுவும் ஒரு பயிற்சிதான். உழைப்பை போட்டுவிட்டு அதற்கான பலனை தேடி உட்கார்ந்து உங்களுக்கான நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த 6 Dark Psychology தந்திரங்களிடமிருந்து ஜாக்கிரதை! 
Success

அந்த நேரத்தை இன்னொரு செயலை சிறப்பாக செய்வதற்காக பயன்படுத்துங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் செய்யும் செயல்களின் எண்ணிக்கை அதிகமாகும். அது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒரு விதையை விதைத்தோமென்றால் அது முளைப்பதற்கு சில நாட்கள் ஆகும். எல்லா விதைகளும் ஒரே நாளில் முளைக்காது. விதையின் தன்மைக்கு தகுந்தவாறு கால அளவுகள் மாறுபடலாம். அதைப்போல நாம் செய்யும் செயல்களும் அந்த இடத்திற்கு தகுந்தவாறு முடிவுகளைக் கொண்டு வர சில நாட்கள் ஆகும். அதுவரை பொறுமை மிகவும் அவசியம்.

அது மட்டுமல்ல பொறுமை என்பது மிகப்பெரிய தியான பயிற்சியும் கூட. அது நம்மை தோல்வியிலும் பலவீனப்படுத்தாமல் நம் மனதை பக்குவப்படுத்தும். எனவே ஒவ்வொருவரும் உழைப்புக்கான பலனை எதிர்பார்த்து காலங்களை வீணாக்காமல் அடுத்த கட்ட வேலையை நோக்கி நகருங்கள்.

இருள் விலகும் போது, எத்தகைய மலையாக இருந்தாலும் அதனைப் பிளந்து கொண்டு சூரியனின் வெளிச்சம் வந்தே தீரும். நம்புங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com