

மகிழ்ச்சி எட்டாத உயரத்திலிருக்கும் அத்தனை பெரிய விஷயமா? இல்லவே இல்லை. ஒரு சிலர் ஆடம்பரமாக இருப்பதிலும், கார், பங்களா என அனைத்து வசதிகளோடு வாழ்வதிலும் தான் மகிழ்ச்சி இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சி என்பது அதுவல்ல. நாம் முயற்சித்தால், ஒரு சில சிறிய சிறிய தருணங்கள் கூட நமக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.
இந்த சிறிய சிறிய தருணங்களை கூட மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களும் இந்த உலகத்தில் அதிகளவில் இருக்கிறார்கள். எவை எல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று பார்க்கலாமா..
சிலர் கல்லூரி நாட்களுக்குப் பிறகு அதிகமாக எடை போட்டு இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எப்படியோ அந்த எடையை குறைத்துவிட்டு திடீரென ஒரு நாள் கல்லூரியில் போட்டுக் கொண்ட ஆடையை அலமாரியிலிருந்து எடுத்து போட்டு பார்ப்பார்கள்.
அப்படி போடும் போது அது சரியாக ஃபிட்டாக்கி விட்டால் அவர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். என்னவோ உலகமே தன் கையில் இருப்பதாக அவர்கள் அந்த தருணத்தில் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் இந்த மாதிரியான மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.
அடுத்த படியாக சில பேர், வேலை நிமித்தம் காரணமாக தன் ஊரை விட்டு வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்றிருக்கலாம், பெண்கள் திருமணமாகி கணவரோடு வேறு ஊருக்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்று இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் சமயம் கிடைக்கும் போது தன்னுடைய பிறந்த ஊருக்கு வருவது பழக்கம். அப்படி வரும்போது சில பேருக்கு தான் வசித்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தெருமுனைக் கடைகளில் விற்கப்படும் அந்த சாதாரண பண்டத்தை வாங்கி உண்ணும்போது அவர்கள் அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சியை சொல்ல முடியாது. அத்தனை ஆனந்தம் அவர்களுக்கு கிடைக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த பண்டத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஒரு விதமான மகிழ்ச்சியான உணர்ச்சியை அளவிட முடியாது.
இன்னும் சிலருக்கு வயதான போதிலும் சிறு வயதில் உபயோகித்த சைக்கிளில் செல்ல மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதெல்லாம் அவர்களுக்கு மனதில் தோன்றுமோ, அப்போதெல்லாம் அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றுவார்கள். அப்போது அவர்கள் அடையும் அந்த மகிழ்ச்சி இருக்கிறதே... அப்பப்பா... சொல்ல முடியாது.
இப்படி சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு சந்தோஷத்தை அளிக்கும். நாம் தான் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க முயற்சிக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது தானாகவே உருவாகாது நாம் தான் அதை உருவாக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் மகிழ்ச்சி அடங்கிதான் இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிக்கொண்டு வர வேண்டியது நம்முடைய கடமை தான்.
நம்மிடம் இருக்கும் வசதியையும், பணத்தையும் வைத்துக்கொண்டு அன்றாடம் நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் செயல்களையும் நாம் மகிழ்ச்சியோடு ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்....
உங்களுக்கும் சின்ன சின்ன ஆசைகள் கண்டிப்பாக இருக்குமே?!