

ஒரு விசேஷ வீடு அல்லது பார்ட்டிக்கு செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அங்கு சிலர் எதையாவது வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் யாருடனும் ஒட்டாமல் அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இவர்களைப் பார்த்தால் பலருக்கும் ஒருவிதமான எண்ணம் தோன்றும். இவர்கள் ஓவராக பந்தா செய்கிறார்கள் அல்லது இவர்களுக்கு தைரியம் இல்லை என்று தப்புக் கணக்கு போடுவார்கள்.
ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால் உண்மை அது கிடையாது. இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய உளவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களை விட, வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து அமைதியை விரும்பும் நபர்கள் முற்றிலும் வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள் என மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆழமான சிந்தனைத் திறன்!
உளவியல் ரீதியாகப் பார்த்தால், அமைதியைத் தேடும் மனிதர்கள் எதையும் மேலோட்டமாகப் பார்க்க மாட்டார்கள். நேற்றைய கிரிக்கெட் மேட்ச்சில் என்ன நடந்தது, பக்கத்து வீட்டுக்காரர் என்ன கார் வாங்கினார் என்பது போன்ற சாதாரண பேச்சுகள் இவர்களுக்கு மிகப்பெரிய சலிப்பை ஏற்படுத்தும்.
இவர்களுக்கு இது போன்ற வெட்டிப் பேச்சுகளில் தங்களின் ஆற்றல் வீணாவதாக ஒரு எண்ணம் இருக்கும். பிரபஞ்சம், வாழ்க்கை, தத்துவம் என ஆழமான விஷயங்களைப் பேசுவதையே இவர்கள் எப்போதும் அதிகம் விரும்புவார்கள். மேலோட்டமான பேச்சுகள் இவர்களின் மூளைக்கு எந்த விதமான சவாலையும் தராது என்பதே நிஜம்.
கூர்மையான கவனிப்பு!
இவர்கள் வாய் மூடி இருக்கும் போது மூளை சும்மா இருப்பதில்லை. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஒரு ஸ்கேனர் போல மிகத் துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை விட, அவர்களின் உடல் மொழி மற்றும் கண்களின் அசைவுகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஈஸியாக எடைபோட்டு விடுவார்கள்.
அதிகம் பேசும் மனிதர்கள் தங்களை அறியாமலேயே தங்களின் பலவீனங்களை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப மிகத் தெளிவாகச் செயல்படுவார்கள்.
உண்மையான உறவுகள்!
நூறு பேரை நண்பர்களாக வைத்துக்கொண்டு ஊர் சுற்றுவது இவர்களுக்குச் சுத்தமாக செட் ஆகாது. இவர்களின் நட்பு வட்டத்தில் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அந்த உறவு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் மிகவும் வலுவானதாக இருக்கும்.
யாரிடமாவது பழக வேண்டும் என்பதற்காகப் போலியாகப் பேசி வற்புறுத்தி சிரிக்க இவர்களுக்குத் தெரியாது. அமைதியாக ஒருவர் பக்கத்தில் எந்த ஒரு தர்மசங்கடமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பதே இவர்களுக்கு ஒரு சிறப்பான தகவல் பரிமாற்றமாகத் தான் தோன்றும்.
அமைதியாக இருப்பது இவர்களின் பலவீனம் கிடையாது, அதுதான் அவர்களின் மிகப்பெரிய பலமே. வீணாகப் பேசி தங்களின் சக்தியை இழக்காமல், அந்த ஆற்றலைத் தங்களின் ஆழ்ந்த சிந்தனைக்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவர்கள் மிக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அந்த மௌனத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய சிந்தனையாளர் ஒளிந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தனிமையையும் அமைதியையும் நேசிப்பவர்கள் உண்மையில் உலகத்தை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பவர்கள் ஆவர்.