
பிடிக்காத வாழ்க்கையை வாழத்தான் நடிக்க வேண்டும். பிடித்த வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நாமாக இயல்பாக இருந்தாலே போதும். வாழ்வில் எதிர்படும் பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகவேண்டும். வேண்டாத விஷயங்களில் கவலை கொள்ளாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தாலே போதும் வாழ்வில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடம் என்பது நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் முடிந்தவரை நடிக்காமல் இயல்பாக இருந்துவிட்டு போகலாமே!
நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி எல்லாமே அது அது அதனதன் இயல்புடன்தான் இயங்குகிறது. அதேபோல் மனிதர்களும் அவரவரின் இயல்புக்கு தகுந்தபடி இருப்பதுதானே சரி. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் ஏன் இயல்பாக இல்லாமல் நடிக்க வேண்டும். ஓஷோவின் புரட்சிகரமான வசனம் நீ நீயாக இரு! என்பதுதான். இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. இதுதான் சரி, அது தவறு என்ற போக்கும் கிடையாது. வருவதை அப்படியே இயல்பாக ஏற்றுக்கொள்வதுதான் மனித இயல்பாக இருக்க வேண்டும்.
எதையும் செயற்கையாக செய்யாமல், மிகையாக எண்ணாமல் இயல்பாக இருப்பதுதான் சரி. இது பழகிப் பார்த்தால் புரிந்துவிடும். சிலர் தங்களால் இயல்பாக இருக்க முடியவில்லை என்று வருந்துவார்கள். அதற்குக் காரணம் அவர்களின் தன்னம்பிக்கை குறைவே. இதை மாற்ற முயற்சித்தாலே இயல்பாக இருப்பது சுலபமாகிவிடும்.
பிறருடன் ஒப்பீடு செய்வதும் இயல்பாக இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும். சிலர் தேவை இல்லாமல் கோபம் முதலியவற்றை அடக்கி வைப்பார்கள். யார் என்ன சொல்லி விடுவார்களோ என்று பேசுவதற்கு தயக்கம் காட்டுபவர்களும் இயல்பாக இருக்க மாட்டார்கள்.
மன பயம் காரணமாக பிரச்னைகளில் இருந்து நழுவும் மனப்பான்மை கொண்டவர்களும் இயல்பாக இருக்க மாட்டார்கள். ஏதாவது தப்பாக நடந்துவிட்டால் நம்மைத்தானே பழி சொல்வார்கள் என்று தயங்கி, மன பயம் கொண்டு இருப்பவர்கள் இயல்பாக இருக்க மாட்டார்கள். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களும், எதற்கெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடிக்கும் மனோபாவம் உள்ளவர்களும் இயல்பாக இருப்பதில்லை.
இயல்பாக இருக்கும்போதுதான் நாம் நிதானமாக யோசிக்கவும், தெளிவாக பேசவும், சரியாக நடந்து கொள்ளவும் முடியும். செயற்கையாக, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதும், நடந்து கொள்வதும் நம்மை இயல்பாக இருக்கவிடாமல் நடிக்க வைக்கும். எனவே இயல்பாக வாழ்வதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம்.
தற்போதைய தருணத்தில் வாழ்வது நமக்கு அமைதியையும், மகிழ்ச்சியும் தரும். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல், எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்தி வாழ்வது நம்மை இயல்பாகவும், அமைதியாகவும் இருக்க வைக்கும்.
பிடிக்காத வாழ்க்கையை வாழத்தான் நடிக்க வேண்டும். ஒருவரது உண்மையான உணர்வுகளையும், விருப்பங்களையும், எண்ணங்களையும் மறைத்து போலி வாழ்க்கையை வாழ்வது என்பது ஒருவரது உளவியல் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும். காரணம் நம் உண்மையான உணர்வுகளை மறைத்து வைப்பது மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். எனவே பிடிக்காத வாழ்க்கையை வாழ நடிப்பதற்கு பதிலாக, அந்த சூழ்நிலையை மாற்ற முயற்சிக்கலாம்.
என்ன நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!