மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்! -வில்லியம் மார்ட்டின்.
திடமான மனம் இருந்தால் வெற்றி தானாகவே தேடிவரும்! -சாணக்கியர்.
மனஉறுதி மலைகளையும் தகர்த்தெறியும்! -மார்க்ஸ்
வெற்றி பெறுவதற்கான அனைத்து சக்திகளும் நம்மிடமே இருக்கும்போது அதை வெளியில் தேடுவது புத்திசாலித்தனமா? ஆம். நம் மனதில் மாபெரும் சக்தி மறைந்துள்ளது. மனதின் சக்திக்கு ஒரு விசேஷ குணம் உள்ளது. கிணற்றுக்குள் ஊற்று சுரந்து கொண்டிருப்பதைப் போன்று மனதிலும் சக்தி எப்போதும் சுரந்த வண்ணமே இருக்கிறது. கிணற்றிலிருந்து நீர் இறைக்கும்போது நீர்மட்டம் குறையக்கூடும். ஆனால் சில மணி நேரத்திற்குள் கிணற்றில் சுரக்கும் ஊற்றின் காரணமாக நீர்மட்டம் பழைய நிலைக்கு வந்துவிடும்.
அதேபோல்தான் ஒருவன் எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு அவனுடைய மனதில் இருக்கும் சக்தி பழைய அளவை எட்டி விடுகிறது. ஆர்வம், நம்பிக்கை, அறிவு, திறமை போன்றவைகளை வளர்த்துக் கொண்டவர்கள் தங்கள் மனதில் குடி கொண்டிருக்கும் சக்தியை தங்களுடைய முன்னேற்றத்திற்கு முழுக்க பயன்படுத்திக்கொண்டு சகல வசதிகளுடன் அமோகமாக வாழ்வார்கள். பயம், சந்தேகம் கலக்கம் போன்ற குணங்களைக் கொண்டவர்கள் தங்களிடம் இருக்கும் சக்தியை சரியாக உபயோகித்துக் கொள்ளாமல் பின் தங்கிய நிலையில் தேங்கி கிடப்பார்கள்.
நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். வெற்றி பெற்றவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை அது சிறியதாக இருந்தாலும் மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். ஆனால் தோல்வி அடைந்தவர்களோ தங்களுக்குள் எப்போதோ ஏற்பட்ட தோல்வியை நினைத்து தங்கள் சக்தியை சரியாக உணராமல் தேங்கிக் கிடப்பார்கள்.
இந்த உலகில் மனிதனுடைய மனம்தான் மிகவும் விலை மதிப்பற்றது அல்லது மதிப்பு வாய்ந்தது. ஆம் கணினி முதல் ராக்கெட் விடுவது வரை அனைத்தும் மனிதனுடைய மனதில் எழுந்த எண்ணங்களே. இன்னும் இதைப் போன்ற எண்ணற்ற புதுமைகள் எதிர்காலத்தில் மனிதன் மனதில் மலரத்தான் போகிறது.
யார் தன் மனதில் இருக்கும் சக்தியை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் கலையை அறிந்து கொள்கிறாரோ அவரால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும். மனதில் மறைந்திருக்கும் சக்தியைக் கொண்டு அடைய முடியாதது என்பது இந்த உலகில் எதுவும் கிடையாது. ஆனால் பெரும்பாலோர் தங்களிடம் இருக்கும் சக்தியில் பத்தில் ஒரு பங்கை கூட பயன்படுத்திக் கொள்வதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் இந்த உலகில் நிறைய பேர் வாழ்க்கையின் கீழ் மட்டத்திலேயே தங்கி அவல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒருவருடைய மன வளர்ச்சியை பொறுத்துதான் அவருடைய எதிர்காலம் அமையும். ஒருவன் மனதில் என்ன செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் முதலில் உருவாகின்றன. பிறகு அவைகளை எப்படி செய்து முடிப்பது என்ற திட்டங்கள் மனதில் தீர்மானிக்கப் படுகிறது. அவைகளை செய்து முடிப்பதற்கு தேவையான விடாமுயற்சியையும் மனம்தான் உற்பத்தி செய்கிறது. வெற்றியை வாங்கி கொடுக்க உதவும் ஆர்வம், நம்பிக்கை போன்றவைகள் மனதில்தான் உருவாகின்றன. எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கான நேர்மறை சக்தியை ஒருவன் தன் மனதில் இருந்துதானே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே மறைந்திருக்கும் மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்தி வெற்றி மாலையை சூடுவோம்.