

ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் உங்கள் வீட்டு ஹாலை உற்று நோக்கினால் ஒரு விசித்திரமான காட்சியைக் காணலாம். சோபாவின் ஒரு முனையில் இருக்கும் இருபது வயது இளைஞன், கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிப் போயிருப்பான். முகம் முழுக்க ஒருவித பதற்றம் இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் தான் போட்ட பதிவை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை லைக்ஸ் வந்தது என்று நொடிக்கொருமுறை சோதித்துக் கொண்டிருப்பான். ஆனால், அதே அறையில் இருக்கும் அவனது தந்தை, எந்தக் கவலையும் இல்லாமல் பழைய பாடலை முணுமுணுத்துக் கொண்டே சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய போன் எங்கேயோ சார்ஜில் இருக்கும்.
ஒரே வீட்டில் இருந்தாலும், இரண்டு தலைமுறையினரும் இரண்டு வெவ்வேறு கிரகங்களில் வாழ்வதைப் போன்ற உணர்வை இது தருகிறது. ஏன் முந்தைய தலைமுறையினர் மனநிறைவுடன் இருக்கிறார்கள் என்பதையும், இன்றைய இளைஞர்கள் ஏன் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பார்வையாளர்களுக்காக வாழும் வாழ்க்கை!
இன்றைய இளைய தலைமுறையின் மிகப்பெரிய பிரச்னை, அவர்கள் தங்களை ஒரு காட்சிப் பொருளாகவே மாற்றிக்கொண்டதுதான். ஒரு உணவகத்திற்குச் சென்றால், உணவு வந்தவுடன் அதை ருசிப்பதைவிட, எந்தக் கோணத்தில் புகைப்படம் எடுத்தால் சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ் கிடைக்கும் என்றே யோசிக்கிறார்கள்.
ஆனால் பெரியவர்களோ, உணவை ருசித்து சாப்பிட்டுவிட்டு, எதிரில் இருப்பவருடன் மனம் விட்டுப் பேசுகிறார்கள். டிஜிட்டல் உலகில் மற்றவர்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெரியவர்களுக்குத் தங்கள் சுயமரியாதை என்பது, இணையத்தில் வரும் விருப்பக் குறிகளைச் சார்ந்ததல்ல. அது அவர்களின் குடும்பம், வேலை மற்றும் உண்மையான உறவுகளைச் சார்ந்தது.
கவனச் சிதறல் Vs மன அமைதி!
முந்தைய தலைமுறையினரிடம் இருக்கும் ஒரு மிகச்சிறந்த பழக்கம், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வது. அவர்கள் சமைத்தால் சமைப்பார்கள், நடந்தால் நடப்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள், பாட்டு கேட்டுக்கொண்டே, சாட்டிங் செய்துகொண்டே, வேலை பார்க்க முயற்சி செய்கிறார்கள்.
இப்படி மூளையைப் பல திசைகளில் சிதற விடுவது மன அமைதியைக் குலைக்கிறது. பெரியவர்களின் இந்த ஒருமுனைப்புத் திறன், தியானத்திற்கு இணையான அமைதியை அவர்களுக்குத் தருகிறது. எதையும் அவசரப்படுத்தாமல், நிதானமாகச் செய்வதிலேயே ஒருவித சுகம் இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
உண்மையான நட்பு vs இணைய நட்பு!
பெரியவர்கள் தங்கள் நண்பர்களைச் சந்திக்க எந்தக் கூகுள் காலண்டரையும் பார்ப்பதில்லை. வாரம் ஒருமுறை சந்திப்பது, டீ குடிப்பது, அரட்டை அடிப்பது என அவர்களின் நட்பு மிகவும் இயல்பானது. அங்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இன்றைய இளைஞர் களுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்தாலும், மனக்கஷ்டத்தைப் பகிர ஒரு உண்மையான நட்பு கிடைப்பதில்லை. வாட்ஸ்அப் குழுக்களில் நாள் முழுவதும் பேசினாலும், நேரடிச் சந்திப்பில் இருக்கும் அந்த நெருக்கம் இணையத்தில் கிடைப்பதில்லை. தனிமை உணர்வு அதிகரிக்க இதுவே மிக முக்கியக் காரணமாகும்.
மீண்டு வருவது எப்படி?
இதற்காக ஸ்மார்ட்போனைத் தூக்கி எறிந்துவிட்டு காட்டுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. பெரியவர்களிடமிருந்து சில எளிய பழக்கங்களைக் கற்றுக்கொண்டாலே போதும். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, போன் இல்லாத நேரமாக அறிவிக்கலாம்.
படுக்கையறைக்கோ அல்லது சாப்பிடும் இடத்திற்கோ போனை எடுத்துச் செல்லாமல் இருக்கலாம். எதையாவது சாதித்தவுடன் அதை உடனே இணையத்தில் பதிவிடாமல், அந்தத் தருணத்தை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சில நினைவுகள் கேமராவில் பதிவதை விட, மனதில் பதிவதே சிறந்தது.