ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு பற்றிய அரிய 10 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஸ்ரீ சுதர்சனரை வழிபட சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.
2. சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீ சுதர்சனரின் அருளைப் பெறலாம்.
3. சக்கரத்தானை, ‘திருவாழியாழ்வான்’ என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.
4. சுவாமி தேசிகன் இவரை ‘சக்ர ரூபஸ்ய சக்ரிண’ என்று போற்றுகிறார். அதாவது, திருமாலுக்கு இணையானவர் என்று இதற்குப் பொருள்.
5. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாகக் காட்சி தருகிறார்.
6. சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.
7. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!
8. நரசிம்ம அவதாரத்தில் அரக்கனின் வரத்தையொட்டி எந்த ஆயுதமும் இல்லாமல் ஹிரண்யகசிபுவை நரசிம்மர் அழித்தபோது, அவரது நகங்களாக விளங்கியவர் சுதர்சனரே.
9. வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி மகாபலி மன்னன் வாமனனுக்கு தானம் கொடுக்க தாரை வார்த்தபோது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப் பாதையை அடைத்தார். அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தனது கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே.
10. சக்கரத்தாழ்வார் பல பழைமையான திருக்கோயில்களில் தனிச்சன்னிதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதர் கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.) தற்போது ஸ்ரீ சுதர்சனரின் மகிமையைப் புரிந்துகொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சன்னிதி அமைக்கப் பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.