
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே உணவு உண்பது, காலில் சாக்ஸ் ஷூ போட்டுக்கொள்வது போன்ற அவர்களின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கவும், அதற்கான பயிற்சியை அவர்களுக்குக் கொடுக்கவும் செய்கின்றனர். அதேபோல், குழந்தைகள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, குளித்தவுடன் சாமி கும்பிடுவது, ஒருசில ஸ்லோகங்கள் சொல்வது போன்ற பழக்கங்களையும் பெற்றோர் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தும் வருகின்றனர்.
ஆன்மிக விழிப்புணர்வு மற்றும் மன அமைதி பெற குழந்தைகள் 5 வகையான சிறிய அளவு மந்திரங்களை தினசரி உச்சரித்து வருவது அவசியம். எதிர்காலத்தில் வாழ்க்கையில் அவர்கள் பல வகையான மேடு பள்ளங்களை சந்திக்க நேரும்போது இவை அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும். அந்தப் புனித மந்திரங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஓம் நமசிவாய: சிவபெருமானை போற்றிப் புகழ்ந்து வழிபடுவதற்காகக் கூறப்படும் மந்திரம் இது. ‘ஓம்’ என்பது பிரபஞ்சத்தின் ஓசையைக் குறிக்கிறது. அதாவது, பிரபஞ்சத்தின் அதிர்வு எனலாம். இந்த ஒரு மந்திரச் சொல்லே உலகில் அனைத்து உயிரினங்கள் உள்ளிட்ட யாவற்றின் படைப்பாளியாகும். ‘நம’ என்பது மரியாதையுடன் கூடிய வணக்கம் செலுத்துவதாகும். ‘சிவாய’ என்பது, ‘தெய்வீக சக்தியுடன், அனைத்தும் உணர்ந்த பரம்பொருளாய் விளங்கும் சிவபெருமானுக்கு நான் தலை வணங்குகிறேன்’ என்பதாகும். இப்படிக் கூறுவது, சிவனிடம் நமக்கு சக்தியும் பாதுகாப்பும் தரும்படி வேண்டிக்கொள்வதாக அர்த்தம்.
2. ஓம் நமோ பகவதே வாசுதேவாய: வைஷ்ணவர்களிடையே மிகப் பிரபலமான மந்திரம் இது. த்வாதசாக்ஷாரி (Dwadasakshari) அல்லது பன்னிரண்டு சிலபல் கொண்ட மந்திரம் இது. இந்த மந்திரம் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தபோது அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பழைமை வாய்ந்த 'விஷ்ணு புராணா' என்றொரு இந்துக்களின் புத்தகத்தில் இது கூறப்பட்டுள்ளது. ‘பகவான் வாசுதேவருக்கு (ஸ்ரீ கிருஷ்ணருக்கு) நான் தலை வணங்குகிறேன்’ என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
3. ஓம் கும் கணபதாய நமஹ: கணேச பகவானின் இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், நம் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். நம் வாழ்க்கையில் குறுக்கிடும் எதிரிகளையும் தடைகளையும் அழிக்க உதவும் மந்திரம் இது. மனத் தெளிவுடன் இலக்கை அடையவும், கனவுகள் நனவாகவும் உதவும் இந்த மந்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்களுக்கு புது விஷயங்களை கற்றுக்கொள்ள தைரியம், தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி கிடைக்கும். ‘பகவான் கணபதிக்கு நான் தலை வணங்குகிறேன்’ என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
4. ஓம் ஸ்ரீராமாய நமஹ: பகவான் மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரமான ஸ்ரீ ராமரை போற்றும் விதமாகக் கூறப்படும் மந்திரம் இது. உலக மக்கள் மகிழ்ச்சியும், மன அமைதியும், நீதியும் பெறுவதற்காக ராமர் அவதரித்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் மனதில் நேர்மை, இரக்க குணம், உள் மனக் கட்டுப்பாடு, மனத்தெளிவு, செய்யும் செயலில் முழு ஈடுபாடு செலுத்துதல் போன்ற நற்குணங்கள் வளர இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பது அவசியம்.
5. ஓம் நமோ நாராயணாய: பகவான் நாராயணனுக்கு (விஷ்ணு) அர்ப்பணிக்கப்பட்ட அமைதி தரும் மந்திரம் இது. ‘பகவான் நாராயணனுக்கு என் பணிவான வணக்கங்கள்’ என்பது இதன் பொருள். குழந்தைகள், கடவுளின் கருணையை உணர்தல், கடவுளிடம் சரணாகதியாவதால் கிடைக்கும் நன்மைகள், நடுநிலைமையுடன் செயல்படுதலின் அவசியம் போன்ற நற்பண்புகளைப் பெற இந்த மந்திரம் பெரிதும் உதவி புரியும். குழந்தைகளின் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அலை பாயும்போது அல்லது சாயந்திர நேரங்களில் இந்த மந்திரத்தை பல முறை கூறி வரலாம்.