

நமக்கு இந்த உலகில் வாழ யாரும் கற்றுக் கொடுக்கவில்லை, மாறாக இயற்கை அல்லது பிரபஞ்ச படைப்பில் எல்லா உயிரினங்களுக்கு இருப்பது போன்று பிறந்தவுடன் நாம் இரண்டு காரியங்களை செய்கிறோம்.
ஒன்று அழுவது மற்றொன்று மூச்சு விடுவது.
அழுவதன் நோக்கம் உடலுக்கு உணவு. மூச்சு விடுவதன் நோக்கம் அந்த உணவு ஜீரணமாக வேண்டும்.
இதுவே சக்தி வடிவில் நம்மை வழி நடத்துகிறது.
அடுத்ததாகத்தான் நமக்கு "சுய சிந்தனை " வருகிறது. அப்படி வரும்போது நம்மால் பார்த்து, கேட்டு, பேசி, முகர்ந்து, உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆக, மனம் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட தொடங்குகிறது.
அதுவே உள்ளவைகளையும், அல்லவைகளையும் பிரித்து நம்மை மகிழ்ச்சி அல்லது சோகத்திற்கு ஆளாக்குகிறது.
கடைசியாக நாம் 'அறிவைக்' கொண்டு 'மனதை' பிரித்து ஆள கற்றுக்கொள்கிறோம்.
அப்போது நமக்கு 'தெளிவு' கிடைக்கிறது.
அந்த தெளிவு என்பது 'இருத்தலை' முன்னிறுத்துவது.
அது 'இறந்தகால' நிகழ்வுகளில் சிக்காமல், 'எதிர்கால' ஏக்கங்களை புறந்தள்ளி நம்மை இருப்புக்கொள்ள செய்யுமானால் நாம் நம்மை உணர தொடங்குகிறோம் என்று அர்த்தம்.
அதாவது இந்த உலகில் "சுயம்" தான் "நிஜம்".
அது எப்போதும் நம்மை பாராட்டி, சீர்படுத்தி, சிதலம் அடையாமல் ஆற்றலைப் பெருக்கி நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்க செய்யக்கூடிய வல்லமை உடையது.
இதைத்தான் நாம் "ஆன்ம சக்தி" என்று சொல்கிறோம்.
இந்த "ஆன்மாவிற்கு" அழிவு கிடையாது.
காரணம் அது "காலத்தை" கடந்தது. "வெளிக்கு" அப்பால் கடந்து செல்வது.
என்றும் நிலையானது;
சபலம் அற்றது;
ஆற்றல் மிக்கது.
இந்த ஆற்றலைத்தான் புத்தரும்,அல்லாவும் ,இயேசுவும் கிருஷ்ணரும் பெற்று நம்மை வழி நடத்துகின்றனர்.
ஆகவே "அகந்தையை " ஒழிப்போம் "ஆற்றலை" பெருக்குவோம்.
அவ்வாறு பெருகும்போது...
முயற்சி பெருகும்,
சக்தி வளரும்,
அறிவு தெளிவும்,
மனசு வசப்படும்,
மூச்சு சீராகும்,
உடல் உயிர் தன்மை பெறும்.
இந்த "புத்தியிர்ப்பு" தான் நம்மை காக்க வல்ல ஆயுதம்.
அது அமைதியை; நாடும் ஆனந்தம் என்பது நம்முள் தோன்றும் ஒரு சுனை.
அது பெரிய " வெள்ளம் போல் "என்றும், எங்கும் பரவ ஒரு மேம்பட்ட சமுதாயம் மறுமலர்ச்சி அடைய உதவும்.
ஆகவே எந்த ஒரு தேடுதலும் "தனிநபரிடம் " இருந்துதான் தொடங்குகிறது.
அது செல்லும் பாதையில் செழுமையும்,பசுமையும் பரப்பி வாழ வழி செய்கிறது.
இந்த உண்மையை உணர்ந்தால் நாம் என்றும் அந்த நிரந்தரமான ஆற்றல்மிக்க ஆனந்தம் என்கிற பெருங்கடலை நீந்தி பெருவாழ்வு வாழலாம்.
முயற்சி திருவினை ஆக்கும்!