

நமக்கு முதலாவதான தேவை திடமான பக்தியே. நாம் நமது நம்பிக்கைகளில் நிலையாக இருக்க வேண்டும். கடவுளின் கருணை தூய்மையான இதயம் இல்லாத, கணத்துக்குக் கணம் அலைபாயும் மனதைக் கொண்டவனிடம் வராது. கடவுள் பக்தனை அவனது தூய்மையான இதயத்தை வைத்தே எடை போடுகிறார்; அவனது வழிபாட்டை வைத்தோ அல்லது அவன் செய்யும் ஜபத்தை வைத்தோ அல்ல. நீங்கள் வழிபாட்டைச் செய்யாவிட்டாலும் தியானம் செய்யாவிட்டாலும் கூட உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டால் அதுவே போதும். பிறகு தெய்வீகம் உங்கள் உள்ளே புகுந்து விடும்.
நேற்று ஒரு மாணவன் சொன்னது போல் சாதனாவின் முதல் கட்டம் - 'கடவுளே நீ என்னுடையவன்' என்று பிரகடனம் செய்வது.
இரண்டாவது கட்டம் - 'இது சரியல்ல, நீ என்னுடையவன் என்று நான் உரிமை கொண்டாடினால் எனது அகங்காரம் இன்னும் வலுப்படும்; நான் உன்னுடையவன் என்பதே சரியான அணுகுமுறையாகும்’ என்று உணர்வதேயாகும்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
கோபிகைகள் கிருஷ்ணரிடம் “நாங்கள் உன்னுடையவர்கள்” என்று பிரகடனம் செய்தனர். யாதவர்கள். “கிருஷ்ணர் எங்களது உறவினர்” என்று பெருமையடித்துக் கொண்டனர். இந்த அகங்கார கர்வமே யாதவர்கள் அனைவரையும் முழுமையாக நாசம் அடையச் செய்தது. கோபிகைகளின் சரணாகதி அணுகுமுறையால் அவர்கள் கிருஷ்ணரை எப்போதும் தங்கள் இதயத்தில் அனுபவிக்க முடிந்தது.
இந்த விஷயத்தில் சமீபத்தில் ஒருநாள் நான் மாணவர்களிடம் சொன்னதை நினவு கொள்கிறேன்.
“எனது முன்னால் நடக்காதே. உன்னை நான் பின் தொடர முடியாது.
எனது பின்னால் நடக்காதே. நான் உன்னை அழைத்துச் செல்ல முடியாது.
எனது பக்கத்தில் நடந்து வா; எனது நண்பனாக இரு.”
நீங்கள் எனது முன்னால் நடக்க ஆரம்பிக்க முயற்சி செய்தால், நீங்கள் என்னைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடும். எனது பின்னால் நீங்கள் நடந்தால் என்னை ஒருவேளை விட்டுவிடக்கூடும். என்னோடு பக்கத்தில் நடந்து வாருங்கள். அப்போது என்னை விட்டு நீங்கள் விலகிப் போக வாய்ப்பே இருக்க முடியாது. ஏனெனில் நான் உங்களுடனேயே இருக்கிறேன்.
இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில், “நீயும் நானும் ஒன்றே” என்பது தான். தெய்வீகம் எங்கும் நிறைந்தது. ஒவ்வொருவரிடம் இறைவன் குடிகொண்டுள்ளான். அப்படி இருக்கும் போது என் முன்னாலோ அல்லது பின்னாலோ நடக்கத் தேவையில்லை. எங்கே சென்றாலும் தெய்வத்தை உன்னுடன் கொண்டு செல். இதுவே சாதனாவின் உண்மையான அடையாளம்.