ஆடி கிருத்திகையில் அற்புத தீப வழிபாடு!

ஆடி கிருத்திகையில் அற்புத தீப வழிபாடு!

ன்று ஆடி கிருத்திகை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது மிகப்பெரும் புண்ணியச் செயலாகும். பூஜை அறையில் முருகப்பெருமான் படத்துக்கு முன்பு ஒரு நட்சத்திர கோலம் போட்டு, அதைச் சுற்றி, ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை எழுத வேண்டும். பிறகு அந்தக் கோலத்தின் நடுவில் வாழை இலை ஒன்றை வைத்து, அதன் மீது மாவிளக்கை வைத்து அதற்கு மஞ்சள், குங்கும் வைத்து, செவ்வரளி மலரால் அலங்கரிக்க வேண்டும். பிறகு அந்த மாவிளக்கில் பஞ்சு திரி போட்டு நெய் வார்த்து தீபமேற்ற வேண்டும். இதனால் வீட்டின் தரித்திரம் ஒழிந்து, செல்வம் பெருகும்.

இந்த ஆடி கிருத்திகை நன்னாளில் குழந்தைப் பேறுக்காக வேண்டிக்கொள்பவர்கள் பாலாடை தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. இந்த தீபமும் மேலே சொன்னதுபோல கோலமிட்டு, அந்தக் கோலத்தின் மீது ஒரு தாம்பாளத் தட்டை வைத்து அதில் பாலாடைக் கட்டிகளை விளக்காகச் செய்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வாசமுள்ள மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு அதில் பஞ்சு திரி போட்டு நெய் வார்த்து தீபமேற்ற வேண்டும். முருகப்பெருமானுக்கு நிவேதனமாக ஒரு தம்பளரில் கல்கண்டு கலந்த பால் வைக்க வேண்டும். வழிபாட்டுக்குப் பிறகு இந்த கல்கண்டு பாலை அருகில் வசிக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அப்படி முடியாதபட்சத்தில் அந்தப் பாலை கணவன் மனைவி இருவரும் அருந்தி விடலாம். இதில் முக்கியமான விஷயம் இந்த வழிபாட்டை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்வது விசேஷம். இந்த தீப வழிபாட்டைச் செய்வதால் நீண்ட காலம் குழந்தைப் பேறு இன்றி வருந்தும் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சொந்தமாக ஒரு வீடு என்பது இன்றைய தினத்தில் பலருக்கும் கனவாகவே இருக்கிறது. சொந்த வீடு வேண்டுபவர்கள் மேற்கூறியபடி முருகப்பெருமான் படத்துக்கு முன்பு கோலமிட்டு, அந்தக் கோலத்தின் மீது ஒரு தாம்பாளத் தட்டை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பிறகு, அந்தத் தாம்பாளத் தட்டின் மீது ஐந்து வெற்றிலைகளை அதன் காம்பு தட்டின் உள்புறமும், வெற்றிலையின் நுனி வெளிப்புறமும் இருக்கும்படி வைக்க வேண்டும். அந்த வெற்றிலைக்கும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அதன் நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து, அதில் நெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தைச் சுற்றி மலர்களால் அலங்கரித்து,வீடு, நிலம், சொத்து தொடர்பான எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர வேண்டும் என முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

இதில் முக்கியமான விஷயம், இந்த மூன்று தீபங்களையும் ஒரே நேரத்தில் ஏற்றக் கூடாது. இன்றைய தினத்தில் ஒரு வேண்டுதலை நினைத்து அந்த தீபத்தை ஏற்றி, வேண்டுதல் முடிந்ததும் தீபத்தை குளிர்வித்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுத்த வேண்டுதலுக்கான தீபத்தை ஏற்றி வழிபடலாம். சிறப்பு வாய்ந்த இந்த ஆடி கிருத்திகை நன்னாளை தவறவிடாமல் உங்கள் குறைகள் தீர, இந்த தீப வழிபாட்டை செய்து முருகப்பெருமானின் பரிபூரண அருளையும் ஆசியும் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com