
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் ஆவுடையார்கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. இக்கோயிலில் மூலவராக அருள்மிகு ஆத்மநாத சுவாமி, ஆவுடையாரும், தாயாராக யோகாம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.
சுமார் 1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலில் அன்னத்தின் ஆவியே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இக்கோயில் திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
பெரிய பாத்திரம் ஒன்றில் சாதத்தை சுட சுட சமைத்து பிறகு அந்த சாதத்தை கருவறையில் உள்ள அமுது மண்டபத்தில் இருக்கும் ஒரு பெரிய திட்டுக்கல் (அமுத படைக்கல்) மீது கொட்டிவிட்டு, அதனுடன் முளைக்கீரை, பாகற்காயும் அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து கதவை மூடிய நிலையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆறு கால பூஜைகளும் நேர்த்தியாக நடைபெறுகிறது.
சுடச் சுட ஆவி பறக்கும் அந்த அன்னத்தில் இருந்து வரும் ஆவியே சுவாமிக்கு நைவேத்தியமாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 3 அடி உயரம், 7 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட அமுத படைக்கல்லில் புழுங்கல் அரிசி சாதம் படைக்கப்படுகிறது.
பொதுவாக, மற்ற கோயில்களில் பச்சரிசி கொண்டே அன்னம் சமைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். ஆனால், இங்கு மட்டுமே புழுங்கல் அரிசி கொண்டு அன்னம் சமைத்து இறைவனுக்குப் படைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவனுக்கு தினமும் 6 கால பூஜைக்கு அமுதம் படைப்பதால் அன்னத்தை சமைக்கப் பயன்படும் அடுப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அணைந்ததே இல்லை என்று கூறப்படுகிறது.
ஆவுடையார் கோயிலின் கருவறை விதானத்தில் 21,600 செப்பு ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21,600 முறை மூச்சு விடுவதைக் குறிப்பதாக உள்ளது.